Skip to main content

லாரியில் ரேஷன் அரிசி கடத்தல்; உடந்தையாக இருந்த ஊழியர்கள்

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Ration rice in trucks with help of employees
மாதிரி படம் 

 

சேலத்தில், இரவோடு இரவாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கடையின் விற்பனை ஊழியர் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக பெண் ஊழியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

 

சேலம் செவ்வாய்பேட்டை நெய்மண்டி அருணாசலம் தெருவில் சேலம் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. ஆக. 14ம் தேதி இரவு, இந்த ரேஷன் கடை முன்பு, ஒரு லாரி நின்றிருந்தது. இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், சந்தேகத்தின் பேரில் அந்த ரேஷன் கடைக்குச் சென்றனர். அப்போது கடையில் இருந்து அரிசி மூட்டைகளை 6 பேர் கும்பல் லாரியில் ஏற்றிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. 

 

காவல்துறையினரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை கூண்டோடு மடக்கிப் பிடித்தனர். இந்த கும்பல் ஏற்கனவே கொண்டலாம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசியை கடத்திக்கொண்டு, செவ்வாய்பேட்டை நெய் மண்டி அருணாசலம் தெரு ரேஷன் கடைக்கு வந்துள்ளதும், கடையில் இருந்தே நேரடியாக அரிசி மூட்டைகளை லாரியில் கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. 

 

கடத்தலுக்காக ஏற்றப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசியையும், லாரியையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ரேஷன் அரிசி, லாரி ஆகியவற்றுடன் பிடிபட்ட 6 பேரையும் சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை வசம்  ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். லாரி ஓட்டுநர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் (57) என்பதும், உடன் வந்தவர்கள் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த சாதிக் பாஷா (53), வாழப்பாடி வடக்கு திருமனுரைச் சேர்ந்த சுப்ரமணியம் (34), சேலம் குகையைச் சேர்ந்த நடேசன் (43), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஷாமால் கோ மைத் (32), பசந்த் மானா (21) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. 

 

இரவு ரோந்துக் காவலர்கள் ரேஷன் கடையை நோக்கி வந்தபோது, ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர், அந்தக் கடையின் எடையாளரான பழனிசாமி (54) என்பது தெரியவந்தது. கடையின் விற்பனை ஊழியர் ஜெயந்திமாலாவுக்கும் (45), எடையாளருக்கும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் நெருக்கமான தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். பிடிபட்ட அனைவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இது ஒருபுறம் இருக்க, ரேஷன் ஊழியர்கள் பழனிசாமி, ஜெயந்திமாலா ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் இருவரையும் பணியிடைநீக்கம் செய்து, சேலம் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண் இயக்குநர் முத்துவிஜயா உத்தரவிட்டார். 

 

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஜெயந்திமாலா, அருணாசலம் ஆசாரி தெருவில் உள்ள ரேஷன் கடையிலும் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். அந்தக் கடையில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் நடத்திய ஆய்வில், அரிசி, சர்க்கரை ஆகியவை இருப்பு குறைவாக உள்ளது. கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்கள் ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 91,200 என்பது தெரியவந்தது. 

 

தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாலேயே அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் ரேஷன் கடையில் இருந்தே நேரடியாக அரிசி கடத்தப்பட்ட சம்பவம் கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்