Skip to main content

9 நாட்களில் 4 பேர் தற்கொலை; இதற்கு தீர்வு என்ன? - ராமதாஸ்

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Ramdoss raised a question regarding the online rummy issue

ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என்று  வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகன் என்ற  இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால்  ஏற்பட்ட  மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மணிவாசகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான  மணிவாசகன்  சம்பாதித்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். ஆனாலும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் நண்பர்கள், சக பணியாளர்கள், உறவினர்கள் போன்றோரிடமும் கடன் வாங்கி  ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் சுமை ரூ.50 லட்சத்தை தாண்டி விட்ட நிலையில், அதை எப்படி அடைப்பது? என்பது தெரியாமல்தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக  தற்கொலை கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார். மணிவாசகனின் தற்கொலையால் அவரது இளம் மனைவியும், ஒன்றரை வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு கொடுமையானது என்பதற்கு  மணிவாசகனின் முடிவு தான் துயரமான எடுத்துக்காட்டு. சம்பாதித்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தது மட்டுமின்றி, ரூ.50 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி சூதாடும் அளவுக்கு மணிவாசகன் துணிந்திருக்கிறார் என்றால் ஆன்லைன் சூதாட்ட போதை ஒரு மனிதனை எந்த அளவுக்கு  ஆட்டுவிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய கொடூரமான ஆன்லைன் சூதாட்டம் இனியும் தொடருவதை  அரசு அனுமதிக்கக்கூடாது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது அதிகரித்து  விட்டன. கடந்த மே 14-ஆம் தேதி  மாங்காடு சீனிவாசன், 15-ஆம் தேதி சென்னை கொருக்குப்பேட்டை மருத்துவ மாணவர் தனுஷ்குமார், மே 17-ஆம் தேதி திருப்பெரும்புதூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்  இராமையா புகலா, மே 22-ஆம் தேதி  ஓசூரில்  மணிவாசகன்  என  9 நாட்களில்  4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகளின் வேகம் இன்னும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 6  மாதங்களில் மொத்தம் 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இந்தத் தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த  நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.  

உச்சநீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக தடை வாங்க முடியாது. இத்தகைய சூழலில் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?   ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என்று  வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? ஏதேனும் சிறப்பு வழிகளைக் கண்டறிந்து ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறப்போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு - இன்று தனித் தீர்மானம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Caste wise census - separate decision today

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் (24.06.2024) சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்குப் பிறகுதான் இதை அமல்படுத்த முடியும் ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

Caste wise census - separate decision today

ஜி.கே. மணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமெனப் பேசினார். அதற்கு அமைச்சர்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே. மணி ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு செய்தது. மேலும் இது தொடர்பாகச் சட்டப்பேரவை வளாகத்தில் பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு படி தான் உள் ஒதுக்கீடு வழங்குவோம் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சனை. ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்குத் தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Caste wise census - separate decision today

இந்நிலையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று (26.06.2024) தனித் தீர்மானத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்த்து நடத்த வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Caste wise census CM MK Stalin explanation

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024)  இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும். ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலேயே சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும். 

Caste wise census CM MK Stalin explanation

எனவே தமிழ்நாடு அரசு கொண்டுவரவுள்ள இந்தத் தீர்மானத்தை ஜி.கே.மணி ஆதரிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி நீங்கள் எந்தக் கூட்டணியில் உள்ளீர்கள் என்று தெரியும். எனவே இது குறித்து நீங்கள் மத்திய அரசிடம் சொல்லுங்கள்” எனப் பதிலளித்தார். இதனையடுத்து சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு செய்தது. மேலும் இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள்ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு படி தான் உள்ஒதுக்கீடு வழங்குவோம் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. சாதி வாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சனை. ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.