Skip to main content

வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தி.மு.க ஆதரிக்கிறதா? ராமதாஸ்

Published on 23/04/2018 | Edited on 23/04/2018
ramadoss


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது  மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையிலான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
 

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து  உச்சநீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்பு யாருடைய உரிமையையும்,  சலுகையையும் பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, ‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் அப்பாவிகளை சுரண்டவோ, பழிவாங்கவோ பயன்படுத்தக்கூடாது. இந்தச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, முதல்கட்ட விசாரணை நடத்திய பிறகே வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குத் தொடரப்பட வேண்டும். முன்பிணை பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்’’ என்றும் தான் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். 
 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக  கூட்டணிக் கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியதுடன், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்; வன்கொடுமைச் சட்டத்தில் நீதிமன்றங்கள் தலையிடாதவாறு அதை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று திமுகவின் செயல்தலைவர் தம்பி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மறுபுறம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பாவிகள் பழிவாங்கப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் வழங்கப்பட்ட தீர்ப்பை எந்த அடிப்படையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதிர்க்கின்றன என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.
 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்டத்திலும் எதிர்க்கவில்லை. அதேபோல்,  பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அந்த சட்டம் தான் பாதுகாப்பு என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம், அவர்கள் அல்லாத 81 விழுக்காடு மக்களை மிரட்டும் ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடாது. உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய கத்தி, உயிரை பறிப்பதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. இந்த நிலைப்பாட்டில் அதிமுகவும், திமுகவுக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


அவ்வாறு இருக்கும் போது, அப்பாவிகள் பழிவாங்கப்படக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை திமுகவும், அதிமுகவும் எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்? வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து, இன்று வரையிலான 30 ஆண்டுகளில் அச்சட்டத்தால் தமிழகத்தில்  லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களே ஆதாரம்.
 

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு ஆயிரம் உதாரணங்களை கூற முடியும். 2010 ஆண்டு திமுக ஆட்சியின் போது, சேலம் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே நடந்த மோதல் தொடர்பாக, அப்போது சென்னையில் இருந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் இது குறித்து அவர் முறையிட்ட போது, குறுக்கிட்டுப் பேசிய அப்போதைய முதலமைச்சர் கலைஞர், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது உண்மை தான் என்றும், திமுக மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான சுரேஷ் ராஜன் மீதே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய்வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.
 

திமுக செயல்தலைவர் தம்பி ஸ்டாலினுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் அவர்களது கட்சி நிர்வாகிகளுக்கு   கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2014-ஆம் ஆண்டில் திமுகவில் குழு மோதல் உச்சத்தில் இருந்தது. அப்போது கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, பகுதி செயலர் ஜெயராமன் ஆகியோர் தங்களை  சாதியின் பெயரால் திட்டியதாகக் கூறி, மு.க. அழகிரி ஆதரவாளர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தனர். அதன்படி ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால்  ஆத்திரமடைந்த திமுக தலைமை, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி பொய்வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு  காரணமான அழகிரி ஆதரவாளர்கள் எம்.எல்.ராஜ், அசோக்குமார், ராஜேந்திரன், முத்துவேல், வெள்ளையன் ஆகிய 5 பேரை கட்சியிலிருந்து நீக்கி 21.01.2014 அன்று  அறிவிப்பு வெளியிட்டது.
 

அடுத்த சில நாட்களில் அதாவது 24.01.2014 அன்று மு.க. அழகிரியை திமுகவிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,‘‘மதுரை மாவட்டத்தில் திமுக தோழர்கள் சிலர் மீது, பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க துணை போகின்றனர். இத்தகைய துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து குழப்பம் விளைவிக்க முயன்ற தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி திமுக உறுப்பினர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’’ என்று கூறப்பட்டிருந்தது.  இத்தனை ஆதாரங்களுக்குப் பிறகும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று தம்பி ஸ்டாலினால் கூற முடியாது. அவ்வாறு கூறினால் அது பொய் என்பதை அவரே அறிவார்.
 

அரசியல்வாதிகள், அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைக் கடந்து  நாடு முழுவதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை எதிர்த்து தான் மராட்டிய மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2017 ஆகஸ்ட் வரை மொத்தம் 57 இடங்களில் மராத்தா மக்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். இவற்றில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிறைவாக 09.08.2017 அன்று மும்பையில் நடைபெற்ற நிறைவுப் பேரணியில் 23 லட்சம் பேர் பங்கேற்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான மக்கள் எழுச்சியையே இது காட்டுகிறது.
 

பட்டியலின, பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தடுப்பதும், அது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்துவதும் முக்கியமாகும். அதற்கு மாறாக, ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக செயல்படும் திமுகவும், அதிமுகவும் அப்பாவி மக்களை பழிவாங்குவதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை ஆதரிக்கின்றனவா அல்லது எதிர்க்கின்றனவா? என்பதை அக்கட்சியின் தலைமைகள் விளக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும்படி அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாறாக, ஒரு சார்பாக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தீர்ப்பை விரைவில் வழங்குவார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.