rajendra balaji questioned for 11 long hours by police

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்டம் குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். அதன்பிறகு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், நேற்று காலை விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் ஆஜரானார்.

Advertisment

அப்போது அவரிடம் தொடர்ந்து சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவரிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், ஆதாரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 31-ந் தேதியே ராஜேந்திர பாலாஜி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், கரோனா பாதிப்படைந்திருந்த அவரிடம் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாததால், அன்றைய தினம் விசாரணை நடைபெறவில்லை. இதனையடுத்தே அவர் சான்றிதழை சமர்ப்பித்த பிறகு நேற்று விசாரணைக்காக ஆஜரானார். காலை 11 மணியளவில் தொடங்கப்பட்ட விசாரணை இரவு 10 வரை நீடித்தது. இந்த விசாரணையின் போது, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியினர் அவருடன் வந்திருந்தனர்.

Advertisment