Skip to main content

தேர்தல் நடத்தை விதியால் ரயில் பயணிகள் திணறல்!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

‘வாகன காப்பகம் தற்காலிகமாக இயங்கவில்லை. இங்கு நிறுத்தும் வாகனங்களுக்கு இரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது.’ என மதுரை ரயில்வே மேற்கு நுழைவு வாயில் வாகன காப்பகச் சுவரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதே ரயில்வே வளாகத்தில், ‘இரண்டு சக்கர வாகன திருடர்கள் ஜாக்கிரதை’ என அறிவிப்பு பலகை ஒன்றைத் தொங்கவிட்டுள்ளது காவல்துறை.  ஆனாலும், திருட்டு போனால் போகட்டும் என்றோ, அப்படி எதுவும் நடக்காது என்ற அசட்டுத் துணிச்சலினாலோ,  ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள், மதுரையிலிருந்து தினமும் வெளியூருக்குச் சென்று திரும்பும் ரயில் பயணிகள்.  

 

madurai

 

அந்த வாகன காப்பகத்தில் நிறுத்தியிருந்த தனது டூ வீலரை, இட நெருக்கடியின் காரணமாக வெகு சிரமப்பட்டு வெளியில் எடுத்துக் கிளம்பிக்கொண்டிருந்த சங்கர்குமார் நம்மிடம் “இங்கு நிறுத்தும் டூ வீலர் திருடுபோனால், காணாமல் போனால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்று பொறுப்பில்லாமல் கூறுகிறது ரயில்வே நிர்வாகம். இரண்டு சக்கர வாகன திருடர்கள் ஜாக்கிரதை என்று அறிவிப்பு வெளியிட்டு, திருடர்களை சுதந்திரமாக திருடவிட்டு வேடிக்கை பார்க்கிறது காவல்துறை.

 

madurai

 

மத்தியிலும், மாநிலத்திலும் அரசு நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதற்கு இதைவிடவா சான்று வேண்டும்? கட்டணம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு தருவதற்காகத்தானே வாகன காப்பகம் கட்டிவிட்டிருக்கின்றனர்? மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வாகன காப்பகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருக்க வேண்டாமா? ஒப்பந்தகாரர் இல்லையென்பதால், டோக்கன் வாங்காமல்,  வேறு வழியின்றி இங்கே வாகனத்தை நிறுத்திவிட்டுப் போகிறோம். வெளியூர் வேலைக்குப் போகும் எங்களால் நிம்மதியாக வேலை பார்க்க முடியாது. வாகனம் நிறுத்திய இடத்தில் இருக்குமா? திருடு போயிருக்குமா? என்ற மன உளைச்சல் திரும்பவந்து வாகனத்தைக் கண்ணில் பார்க்கும் வரை பாடாய்ப்படுத்தும்” என்றார் ஆதங்கத்துடன்.

 

madurai


இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் செல்வராஜை தொடர்புகொண்டு கேட்டபோது “வாகன காப்பகத்தின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. டென்டர் போட்டு எல்லாம் ரெடியாக இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக டென்டரை அவார்ட் பண்ணாமல் நிறுத்தி வைத்திருக்கிறோம். விதிகளின்படி பழைய ஒப்பந்தத்தையும் நீடிக்க முடியாது. பயணிகள் நலன் கருதி விதிகளை மீறி செயல்பட்டால், எங்களுக்கு சம்மன் வரும். தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் நாளிலேயே,  ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வந்து,  வாகன காப்பகம் இயங்க ஆரம்பித்துவிடும்.” என்றார். 
 

“லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் பலரும் வாங்குகின்றனர். சுயநலம் என்றால் சட்டத்தை மீறுகின்றனர். பொதுநலன் என்றால் அதே சட்டத்தைக் காரணம் காட்டி தப்பித்துக்கொள்வர். மக்களைக் காக்க வேண்டிய சட்டமும் விதிமுறைகளும் பொதுநலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாமா? திருடர்களுக்குத் துணை போகலாமா?” என்று சினந்தார் சங்கர்குமார். சட்டம் என்ற இருட்டறையில் பாமரனின் பார்வைக்கும் கேள்விக்கும்  ‘வெளிச்சம்’ தேட முடியாது!

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.