Skip to main content

நண்பர்கள், உதவியாளர்களுக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களிலும் தொடரும் ரெய்டு! (படங்கள்)

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில நாட்களாக சோதனை மேற்கொண்டனர். அதேபோல் மீண்டும் இன்று (22.10.2021) காலை முதலே அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய நான்கு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகிறது.

 

சென்னை நந்தனம் எக்ஸ்டென்ஷன் 11வது தெரு, வெங்கடேஸ்வரா மருத்துவமனை பின்புறம் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடக்கிறது. ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் என்பவருக்கு சொந்தமான சாசன் டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றொரு உதவியாளரான முருகனின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சோதனையானது நடைபெறுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Enforcement Department raid in Chennai

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

Enforcement Department raid in Chennai

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 5 ஆம் தேதி (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஜாபர் சாதிக் வீட்டின் சீல் அகற்றப்பட்டது. இதற்கிடையே ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 

Enforcement Department raid in Chennai

இந்நிலையில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். (C.R.P.F.) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் (N.C.B.) இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) ஆஜராகி விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Enforcement Department raid in Chennai

இதே போன்று சென்னையில் தியாகராயர் நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல உணவகத்திற்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.