உத்தரப்பிரதேசம், லக்கிம்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள், பாஜகவினர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச காவல்துறையினர் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
மேலும், லக்கிம்பூருக்குச் செல்ல அனுமதி கோரிய ராகுல் காந்தி தலைமையிலான ஐவர் குழுவிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ராகுல் காந்தி உட்பட மூன்று பேர் மட்டும் லக்கிம்பூர் செல்ல மீண்டும் காங்கிரஸ் சார்பில் உத்தரப்பிரதேச அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதனையடுத்து உத்தரப்பிரதேச அரசு, ராகுல் காந்தியுடன் மேலும் மூவர் லக்கிம்பூர் செல்ல அனுமதியளித்தது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, “உத்தரப் பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார்.
விவசாயிகள் இறந்த விவகாரத்தை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உத்தரப் பிரதேச அரசு விசாரணை தொடங்க முடிவு செய்துள்ளது. பிரேதப் பரிசோதனை தொடர்பாக கேள்வி எழுப்ப ராகுல் காந்தி என்ன மருத்துவரா? காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் விவசாயிகள் மீது நடந்த தடியடி பற்றி ராகுல் காந்தி ஏன் கேள்வி கேட்கவில்லை?” என்றார்.