Skip to main content

மனிதத்தை மறந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்! சீனியர்களின் ராகிங்கால் தூக்க மாத்திரை சாப்பிட்ட ஜூனியர்

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Racking in dharmapuri medical college

 

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு மாணவரை நிர்வாணமாக நடக்கச் சொல்லி ராகிங் செய்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

நாமக்கல்லைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் குமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (20). இவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் 200 மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். கடந்த நவம்பர் 23ம் தேதி இரவு, விடுதியில் தங்கி படித்து வரும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர், குமரனை ராகிங் செய்துள்ளனர். இதற்கு சரவணன் எதிர்ப்பு தெரிவித்ததால், சீனியர் மாணவர்கள் அவரை கழுத்தை நெரித்து தாக்கி உள்ளனர். 

 

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் குமரன், உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தர்மபுரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த ராகிங் செய்த சீனியர் மாணவர்கள், அவரை மிரட்டியுள்ளனர். அதற்கு பயந்து அவர் புகாரை திரும்பப் பெற்றார். இந்த விடுதியின் காப்பாளர் மருத்துவர் இளவரசன் என்பவர், நோய்க்குறியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

இவர், புகாரளித்த மாணவரை தேர்வில் தோல்வி அடையச் செய்திருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த குமரன், டிச. 4ம் தேதி இரவு முதல் மறுநாள் (டிச. 5) வரை தொடர்ச்சியாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று, சுயநினைவின்றி இருந்துள்ளார். உடன் இருந்த மற்ற மாணவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து தர்மபுரி நகர காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கடந்த 23ம் தேதி இரவு விடுதியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 4 பேர் குமரனை அழைத்து ராகிங் செய்துள்ளனர். அப்போது முட்டி போட்டவாறு நடக்க வைத்துள்ளனர். நிர்வாணமாக நடக்கும்படியும் தொல்லை செய்துள்ளனர். இதனால் குமரனுக்கும் சீனியர் மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குமரனை சீனியர்கள் கழுத்தை நெரித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வெளியே தெரிய வந்தபிறகும் விடுதி காப்பாளர் இப்பிரச்சனை குறித்து விசாரிக்காமல் அலட்சியமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. 

 

இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறுகையில், ''விடுதியில் ராகிங் நடந்தது குறித்து தெரிய வந்ததும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் நான்கு பேரையும் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து விட்டோம். மேலும், அவர்களை விடுதியில் இருந்தும் அனுப்பி விட்டோம்.  இச்சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. விடுதி காப்பாளர்கள் 2 பேர் மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர் குமரன், தற்போது கடும் மன உளைச்சலில் உள்ளதால் அவர் உடல்நலம் சீராகும் வரை பெற்றோருடன் இருக்க வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.