Skip to main content

மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

Public Welfare Workers Union Attention Demonstration!

 

"தகுதி அடிப்படையில் எங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் எங்களின் நியாயமான கோரிக்கைகளை மக்கள் நலன் சார்ந்து அமைந்துள்ள தி.மு.க. அரசு நிறைவேற்றும் என எதிர் பார்க்கிறோம்" என மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 10ந் தேதி மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

ஈரோடு மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அச்சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி ஆகியோர் நம்மிடம், "முன்னாள் முதல்வர் கலைஞர், 1989ஆம் ஆண்டு மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் செய்தார். 1991ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி வந்ததும் நாங்கள் எல்லோரும் திமுகவினர் எனக் கூறி எங்களைப் பணி நீக்கம் செய்தார். மீண்டும் 1996ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. ஆனால் 2001ல் அ.தி.மு.க. "ஜெ" ஆட்சி வந்ததும் தொடர்ந்து எங்களை பணிநீக்கம் செய்தார். மறுபடியும் கலைஞர் தலைமையில் 2006ல் திமுக ஆட்சி வந்ததும் பணி வழங்கப்பட்டது. ஆனால், இரக்கமே இல்லாமல் 2011 "ஜெ" ஆட்சியில் மீண்டும் நாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டோம். ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் பணி நியமனம் செய்யப்படுவதும், அ.தி.மு.க ஆட்சி வந்ததும் பணிநீக்கம் செய்யப்படுவதும் எனத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

இதை உச்ச நீதிமன்றமே கடுமையாகக் கண்டித்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது கால்பந்து போல மக்கள் நலப் பணியாளர்கள் நடத்தப்படுவது நியாயமா என நீதிமன்றம் கூறியது. ஆனால் அதை எதிர்த்து அப்போது அ.தி.மு.க அரசு மேல் முறையீடு செய்து தடையாணை பெற்றது. தற்போது மீண்டும் நீதிமன்றம் கல்வித்தகுதி அடிப்படையில் காலிப் பணியிடங்களை மக்கள் நலப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப உத்தரவிட்டுள்ளது. மற்ற அரசு ஊழியர்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ அதை இவர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

 

தற்போது தி.மு.க. அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக மக்கள் நலப் பணியாளர்களை பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது. இதன்படி தொகுப்பு ஊதியமாக ரூபாய் 7500 மட்டும் கிடைக்கும். நாங்கள் ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளோம். இதில் தவறு நடந்தால் கூட எங்களால் எதுவும் சுட்டிக் காட்ட முடியாது. 

 

மொத்தம் 13 ஆயிரத்து 500 பேர் ஆரம்ப நிலையில் பணி அமர்த்தப்பட்டோம். அதில் சிலர் இறந்துள்ளனர். தற்போது 11,500 பேர் மட்டுமே உள்ளோம். கடந்த திமுக ஆட்சியின்போது 20% மக்கள் நலப் பணியாளர்களுக்குப் பணி உயர்வு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, 760 பேர் அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது சம்பளம் 36 ஆயிரம். இப்போது குறைந்த சம்பளத்தில் பணி நியமனம் செய்வது வருத்தத்துக்குரியது. பணி நீக்கம் குறித்து உச்சநீதிமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் எங்களுக்காக வாதாடினார். 

 

தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கப்படுவதாக அரசாணை வந்துள்ளது. வயது முதிர்ந்தவர்கள் பலர் உள்ளனர். பட்டப்படிப்பு, பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.எனப் பலரும் படித்துள்ளார்கள். எனவே எங்களுக்கு நாங்கள் படித்த கல்வித்தகுதி அடிப்படையில், நீதிமன்றம் கூறியபடி அரசு நிரந்தர பணியிடம் வழங்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் எங்களை பணியிலிருந்து எந்த அரசாலும் நீக்க முடியாது. இதை வலியுறுத்தித்தான் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மேலும் உச்சநீதிமன்றத்தில் எங்கள் சம்பந்தமாகப் பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.