Skip to main content

அடுத்தடுத்த கொலையால் சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்! 

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Public road blockade

 

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரம் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சீனிவாசன். இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு டீக் கடையில் பணியாற்றி வந்தார். ஜனவரி 26 ஆம் தேதி இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சீனிவாசன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் இன்று, உடற்கூராய்வு முடிந்து கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் ஆம்புலன்சில் அவரது வீட்டுக்கு கொண்டு வரும் தகவல் அப்பகுதி மக்களுக்கு கிடைத்தது. உடனே எஸ்.எஸ்.கே. மானியம் தெருவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தெற்கு போலீஸ் நிலையம் அருகே அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடலை கொண்டுவந்த ஆம்புலன்ஸை மடக்கிய பொதுமக்கள், ஆம்புலன்சிலிருந்து சீனிவாசன் உடலை இறக்கி சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதனால் வேலூர் மாநகரத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் பிணத்தை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சு வார்த்தையில், ‘எஸ்.எஸ்.கே. மானியம் தெருவில் கஞ்சா, மது விற்பனை அமோகமாக நடக்கிறது.  24 மணி நேரமும் எது கேட்டாலும் அங்கு கிடைக்கும். தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கஞ்சா, மது போதையில் தெருவில் நின்று அட்டகாசம் செய்கின்றனர். இதனைத் தட்டிக் கேட்டால் பாட்டில் மற்றும் கத்தியால் வெட்டி தாக்குகின்றனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனை போலீசார் கண்டு கொள்வதே இல்லை. அசம்பாவிதங்களை தடுக்கவும், மக்களுக்கு முறையான பாதுகாப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டனர். 

 

மேலும், இந்தப் பகுதியில் இப்போது நடந்ததோடு சேர்த்து மூன்றாவது கொலை. இதுபோன்ற கொலைகள் இனி வரும் காலங்களில் நடக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

எஸ்.எஸ்.கே. மானியம் தெருவில் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியல் செய்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.