Skip to main content

“அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்குப்பதிவு...” - அமைச்சர் பொன்முடி தரப்பு

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

"Prosecution as a political vendetta..." - Minister Ponmudi's side

 

தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1991- 1996 மற்றும் 2006 - 2011 திமுக ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்து சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பொன்முடி மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

 

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் முகாந்திரம் இல்லை என பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவிப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதி வசந்த லீலா கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தார்.

 

இதையடுத்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ வாதிட்டார். அதில், “1991- 1996 மற்றும் 2006 - 20211 என இரு முறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அரசியல் எதிரிகளால் தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதின் அடிப்படையிலேயே தனக்கு எதிரான வழக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்துள்ளது.  வேலூர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து 4 நாட்களில் தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலூர் நீதிமன்ற நீதிபதியால் இந்த வழக்கு 9 மாதங்கள் விசாரிக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது.

 

"Prosecution as a political vendetta..." - Minister Ponmudi's side

 

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான், “லஞ்ச ஒழிப்புத்துறையின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்கிறேன்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்