Prohibited lottery sales; Two arrested

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஈரோடு தாலுகா போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னிமலை, ரோடு, கே.கே. நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள துணி சலவை செய்யும் கடையின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் இருவரும் காசி பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (38), பூவரசன் (27) என்பது தெரியவந்தது.மேலும், விசாரணையில், அவர்கள் இருவரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் 10, 2 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.