private company Officers misbehaved with women who asked for salary

Advertisment

கோவையில் நிலுவையில் உள்ள சம்பளத்தைக் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது சம்பள பாக்கியைக் கேட்டு சென்ற பொழுது தனக்கு பாலியல் தொந்தரவு தந்தார்கள் என பீளமேடு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், "நான், கோவை-அவினாசி சாலையில் ஹோப் காலேஜ் அருகேயுள்ள ஸ்ரீநகரில் ஒரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பணியாற்றி வந்தேன். எனக்கு ரூ. 70 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்பட்டது.

பின்னர் தனிப்பட்ட காரணத்தால் பணியில் இருந்து நின்றுவிட்டேன். அப்போது எனக்கு தனியார் நிறுவனம் சார்பில் 4 மாத சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. எனவே, இதுதொடர்பாக நிறுவன அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததுடன், சரியாக பதிலும் அளிக்கவில்லை. இதனால், நான் நேரடியாகவே நிறுவனத்திற்கு வந்து சம்பள பாக்கியை தருமாறு கேட்டேன். அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் சுதாகர் மற்றும் சின்னகாளி இருவரும் சம்பள பணம் வேண்டும் என்றால் ஆசைக்கு இணங்குமாறும், பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்கள், என்னை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது சம்பள பாக்கியை பெற்றுத்தர வேண்டும்." என குறிப்பிட்டு இருந்தார்.

Advertisment

இதனடிப்படையில் பீளமேடு காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். பின்னர், பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர்கள் சுதாகர் மற்றும் சின்னகாளி இருவர் மீதும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். மேலும், தொடர்ந்து இது இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சொல்கின்றனர்.