Skip to main content

விசாரணைக் கைதி மரணம்..! மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் குற்றச்சாட்டு..!    

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

Prisoner passes away in sivagangai


 
மூதாட்டி ஒருவரை அடித்து, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில், காவல்துறையால் கைது செய்யப்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி ஒருவர், சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ளதால் கலக்கமடைந்துள்ளது சிறைத்துறை.

 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்டது பாப்பா ஊரணி பகுதி. கடந்த 9ஆம் தேதியன்று இரவு, அப்பகுதியிலுள்ள நாடக மேடை ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த 65 வயது மூதாட்டி ஒருவரை மிரட்டி, அடித்து துன்புறுத்தி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகனான 52 வயதுடைய நீலகண்டனை காரைக்குடி தெற்கு காவல்துறை கைது செய்தது. இது தொடர்பாக குற்ற எண் 27/21 பிரிவு 354(a), 294(b), 323, 506(1) பிரிவுகளின் கீழ் காரைக்குடி தெற்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

 

அதனைத் தொடர்ந்து அவர், 10ஆம் தேதி விசாரணைக் கைதியாக திருப்புத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று (16.03.2021) மதிய வேளையில் கிளைச்சிறையிலிருந்த விசாரணைக் கைதி நீலகண்டனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு கூடுதல் மற்றும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிவகங்கை மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நீலகண்டன் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த நீலகண்டனுக்கு இரண்டு மனைவிகளும், 6 குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Prisoner passes away in sivagangai

 

"எவ்வித நோய் நொடியுமின்றி நன்கு தேக ஆரோக்கியத்துடனே சிறைக்கு சென்றவர் எப்படி உடல்நலக்குறைவினால் இறந்திருக்க முடியும்? கிளைச்சிறையில் ஏதோ நடந்திருக்கிறது. இவரது மரணம் எங்களுக்கு சந்தேகமாக இருப்பதால் நீதிபதி தலைமையில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்" என விசாரணைக் கைதி நீலகண்டனின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி தெற்கு காவல்துறையினர், உறவினர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் காரைக்குடி விரைவு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் இப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பு தொற்றியுள்ளது.

 

படம்: விவேக் 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.