Skip to main content

சிறையில் கைதி மரணம்... காரணம் மதுவிலக்கு பிரிவினரின் லஞ்ச வெறியா?

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Prisoner incident in thiruvannamalai

 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்காவுக்கு உட்பட்டது இளையாங்குன்னி ஊராட்சி. இதன் அருகிலுள்ள தட்டரணை கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான தங்கமணி. ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நீண்ட காலமாக சாராயம் விற்பனை செய்யும் வியாபாரி. இவரை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி விசாரணைக்காக மதுவிலக்கு குற்றப்பிரிவு (கலால்) போலீசார் தங்கமணியை அவரது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

 

சாராய விற்பனை வழக்கில் கைது செய்து ஏப்ரல் 27 ஆம் தேதி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை கிளைச்சிறையில் அடைத்தனர். மதியம் தங்கமணிக்கு வலிப்பு வந்ததாக சிறைத்துறை தரப்பிலிருந்து தங்கமணி குடும்பத்துக்கு தகவல் கூறியுள்ளனர். மாலை 4 மணியளவில் தங்கமணி இறந்துவிட்டதாக தகவல் கூறியுள்ளனர்.

 

தந்தையை கைது செய்ததும், அதுகுறித்து நாங்கள் விசாரித்தபோது, 2 லட்ச ரூபாய் பணம் தந்தால் சாதாரண வழக்குப்போட்டு விட்டுவிடுகிறோம், இல்லையேல் குண்டாஸ் என மிரட்டினார்கள் கலால் பிரிவு போலீசார் என குற்றம்சாட்டினர் தங்கமணியின் குடும்பத்தினர். இதுக்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ்சிடம் முறையிட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தபோது, கலெக்டர் அலுவலக கதவுகளை மூடி அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

Prisoner incident in thiruvannamalai

 

குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்ற கஸ்டடியில் சிறையிலிருந்தபோது மரணமடைந்ததால் நீதித்துறை விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது சட்டம். அதன்படி திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பாக்யராஜ் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அவரின் மேற்பார்வையில் உடற்கூராய்வு நடைபெற்றது.

 

என் தந்தையை அடித்துக் கொன்று விட்டார்கள், அவரது முகத்தில், கையில் காயம் உள்ளது, பிரேதப் பரிசோதனை அறிக்கை வரட்டும், அதன்பின் உடலை வாங்கிக் கொள்கிறோம் எனச்சொன்ன குடும்பத்தினர், என் தந்தை இறப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனால் உடல் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 

காவல்துறை அதிகாரிகள் என்னிடம் பிரச்சனை செய்யாதீர்கள், பின்னால் உங்களை விட மாட்டோம், உடலை வாங்கிக்கொண்டு அமைதியாக போங்கள். அவர் இறந்ததுக்கு நஷ்ட ஈடு 7 லட்சம் தருகிறோம் என பேரம் பேசி மிரட்டுகிறார்கள். சாகடிக்கவில்லை என்றால் பிறகு எதற்கு பணம் தரவேண்டும்? என கேள்வியும் எழுகிறது.

 

இதுக்குறித்து காவல்துறையில் நேர்மையான காவலர்களிடம் கேட்டபோது, 'அரசுப் பணியில் இருப்பவர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது விதி. காவல்துறையிலும்  3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதில் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவலர்கள் மட்டும் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதற்கு காரணம் மாமூல். மதுவை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட பிரிவு என்றாலும், இந்த பிரிவில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள், கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்பவர்கள், வெளிமாநில மதுப்பானங்களை கொண்டு வந்து விற்பவர்கள் என பெரிய பட்டியலே உள்ளது. அந்த பட்டியலை வைத்துக் கொண்டு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்தோம், அழித்தோம், வியாபாரிகளைக் கைது செய்து செய்தோம் என வீடியோ, போட்டோ வெளியிடுவார்கள். உண்மையில் இது எல்லாம் அரசுக்கு கணக்கு காட்டத்தான். வழக்கு போட்டாலும், குண்டர் சட்டத்தில் அடைத்தாலும் திரும்ப வந்து அவர்களை தொழில் செய்ய வைப்பார்கள். ஏன் எனில் அவர்களிடமிருந்து வரும் மாமூல் அப்படி.

 

ஒரு சாராய வியாபாரி குறிப்பிட்ட காவல்நிலையத்துக்கு மாதாமாதம் மாமூல் தருவதுப்போல், கலால் பிரிவு போலீசாருக்கும் தருவார்கள். இதையெல்லாமே காய்ச்சுபவன், வியபாரியின் தன்மை, விற்பனையைப் பொறுத்து ஆயிரம் முதல் லட்சங்கள் வரை மாதாமாதம் மாமூல் வாங்குவார்கள். சாதாரண பிக்பாக்கெட் கேஸில் சிக்குபவனை கூட அடிப்பார்கள், சாராய கேஸில் பிடித்து வருபவர்களை மட்டும் எந்த நிலையிலும் அடிக்க மாட்டார்கள். காரணம் அந்தளவுக்கு மாமூல் தந்து மாமன் – மச்சானாக பழகுவார்கள்' என்றார்கள்.

 

இந்த வழக்கிலும் சம்மந்தப்பட்ட சாராய வியாபாரிக்கு அடிக்கடி வலிப்பு வரும் எனச் சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு லோக்கல் போலீசார் பிடித்துவந்து ஸ்டேஷனில் வைத்திருந்தபோது வலிப்பு வந்ததால் அப்போது டூட்டியில் இருந்த போலீசார் பயந்து போயினர். அதனால் வழக்கு போட்டு ஜாமீனில் விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

 

தற்போது கலால் பிரிவில் இடமாற்றம் நடக்கவுள்ளது, அதற்குள் கலெக்ஷனை முடிக்க வேண்டும்மென, சாராய வியாபாரிகளிடம் வசூல் நடத்துகிறார் குறிப்பிட்ட அதிகாரி. இதற்காகக் கடந்த ஒரு மாதமாக இறந்துப்போன சாராய வியாபாரியிடம் 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் முடியாது என மறுக்க 1 லட்சம் தந்தே ஆக வேண்டும் என நெருக்கடி தந்துள்ளார். இது மாதாந்திர மாமூல் இல்லாமல் தனியாக கேட்டத்தொகை. அவ்வளவு பணத்தை தரமுடியாது எனச்சொன்னதால் கைது செய்தனர். பணம் வராது என்றதும் குண்டாஸ் போட முடிவு செய்து மிரட்டியுள்ளனர். இந்த மன உளைச்சலில் இருந்தவருக்கு உடல் முடியாமல் போய் இறந்துள்ளார்.

 

இது லாக்கப் டெத்தோ, சிறை டார்ச்சரோ கிடையாது, உடல்நிலைக்கோளாறுதான். அவருக்கு எங்க அதிகாரிகள் சிலர் பணம் கேட்டு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. லஞ்சம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவர்களை காப்பாற்றவே எஸ்.பி முதல் டி.ஐ.ஜி வரை முயற்சி செய்கிறார்கள் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.