Skip to main content

ம.ஜ.க.வின் சிறை நிரப்பும் போராட்டம்; தமிமுன் அன்சாரி உட்பட பலர் கைது! 

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

The prison-filling struggle of the MJK; Many arrested, including Tamimun Ansari!

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் தமிழக அரசு சாதி மத வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (08.01.2022) கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

 

தமிழகம் தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்த இந்நிகழ்விற்கு ம.ஜ.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், கோவை ராமகிருட்டிணன், தியாகு, வழக்கறிஞர் பவானி மோகன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

இதில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள்தண்டனை சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை விரைந்து வழங்க வேண்டும். தமிழக அரசு 161வது சட்ட பிரிவை பயன்படுத்தி இவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும். அதற்காக இன்றிலிருந்து 100 நாட்கள் காத்திருப்பது என்றும் தாமதமானால் அடுத்தகட்ட ஜனநாயக போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்வில் அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் செய்யது அகமது பாரூக் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

இந்நிலையில், ம.ஜ.க. பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், தஞ்சை விசிறி சாமியார், ம.ஜ.க. துணைப் பொதுச் செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து அருகில் இருக்கும் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

சிறை நிரப்பும் போராட்டம்; மஜக அறிவிப்பு

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Jail Filling Struggle; MJK

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் இன்று பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது.

 

இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக ஆயுள் சிறைவாசிகள் குறித்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்து வாடும் ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இக்கோரிக்கையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் முன்பு 'சிறை நிரப்பும் போராட்டம்' நடத்துவது என்றும், இதில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் பங்கேற்க செய்வது  என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எதிர்வரும் ஜூலை 9 அன்று நெல்லை - பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து மதுரை மத்திய சிறை முன்பு 18.08.2023 அன்றும், சேலம் மத்திய சிறை முன்பு 07.09.2023 அன்றும், கடலூர் மத்திய சிறை முன்பு 07.10.2023 அன்றும் இப்போராட்டம் நடத்தப்படும் என்றும் சென்னை - புழல், கோவை, திருச்சி, வேலூர், ஆகிய சிறைச்சாலைகள் முன்பு அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போராட்டங்கள் மாபெரும் சட்டப் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

 

இதில் தலைமை நிர்வாகிகள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.