நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவலை கருத்தில்கொண்டு தனிநபர் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றைத் தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
கொடைக்கானல் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்ய வருகை தந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகப்பேறு உதவித்தொகை, 100 சதவீதம் கரோனா ஊசி செலுத்திய நகராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குதல் போன்றவற்றை வழங்கினார்.
அதன் பின் அமைச்சர் பேசும் போது... ''கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான 30 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிக்கு விரைவில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிடி ஸ்கேன் வழங்கப்பட உள்ளது. பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் கடந்த 1946 ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது அது மிகவும் பழுதடைந்துள்ளது. இதையடுத்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் நேரில் பார்வையிட்டு திட்டம் தயாரிக்கப்பட உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் அங்கு விரைவில் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் பகுதியில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் இங்கு மூன்று இடங்களில் அரசு மருத்துவமனைகள், 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 துணை சுகாதார நிலையங்கள், ஒரு நகர்ப்புற சுகாதார நிலையம் உள்ளது. இவற்றுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் செய்து தரப்படும். பூம்பாறை பகுதியில் சுமார் 87 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்பதற்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவ ஆஸ்பத்திரி ஆக தரம் உயர்த்தப்பட்டு அதனை சீரமைக்க சுமார் 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது கொடைக்கானல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படுவது மகிழ்ச்சி அளித்தது. மலைகளின் இளவரசி மருத்துவத்துறையின் இளவரசியாக காட்சியளிக்கிறது. கொடைக்கானல் நகராட்சி பகுதிகள்தான் முதன் முதலாக 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது தவணையை சுமார் 92 சதவீதம் அளவுக்கு போடப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். திண்டுக்கல் மாவட்டம் தடுப்பூசி போடுவது சாதனை படைத்துள்ளது.
'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் நேற்று வரை சுமார் 73 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். முதல்வரின் விருப்பப்படி விரைவில் ஒரு கோடி பேருக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டம் வீடு தேடிச் சென்று மருந்துகள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு, பாப்பம்பட்டி, எரியோடு, வடமதுரை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 125 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
இந்த விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் பேசும்போது, 'தமிழக அரசு பொறுப்பேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மா.சுப்பிரமணியன் எங்கு சென்றாலும் ஆய்வு நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். பழனி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த எட்டு மாத காலத்தில் பல்வேறு வேலை செய்து கொடுத்துள்ளார். மருத்துவக் கல்லூரி, பழனி அரசு மருத்துவமனைக்கு சுமார் 78 கோடி ரூபாய்களை வழங்கி உள்ளார். கொடைக்கானலில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் விடுதி கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மத்திய அரசு அனுமதி பெற்று மேலும் ஒரு ஆரம்பச் சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதியில் காலியாக உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்'' என்று கூறினார்.
இந்த விழாவில் நகரசபைத் தலைவர் செல்லத்துரை துணைத் தலைவர் மாயக்கண்ணன், ஆர்டிஓ முருகேசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா, ஒன்றிய செயலாளர் ராஜதுரை, நகர செயலாளர் முகமது இப்ராஹிம் உட்பட அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.