Priest from Tirupur arrested for talking about Murugan temple

Advertisment

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி கிறிஸ்தவ போதகரான அர்ஜுனன் என்கிற ஜான் பீட்டர் தனது வீட்டில் வழிபாடு நடத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வழிபாடு நடத்த அதே பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டதோடு ஜான் பீட்டர் தாக்கப்பட்டார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சென்னிமலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னிமலையில் கிறிஸ்தவ முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் சரவணன் கலந்து கொண்டு, சென்னிமலை முருகன் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகின்றது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவரான சரவணன்(36), திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டீஃபன்(40) ஆகிய இருவர் மீதும் மதத்தை அவமதித்தல், மத கலவரத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவணனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியார் ஸ்டீஃபனை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் ஸ்டீஃபனை ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.