செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற அதிவேக செஸ் போட்டி ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தத் தொடரின் ஐந்தாவது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்வீரர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இப்போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார்.
போட்டியின் 40ஆவது காய் நகர்த்தலில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றியை தன்வசப்படுத்தினார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பிரக்ஞானந்தாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.