Skip to main content

முதலமைச்சர் உதவியை நாடும் ஏழை மாணவி... 

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
Poor student seeks CM's help ...

 

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி காயத்ரி தனது கல்லூரிப் படிப்பை தொடர, தனியார் கல்லூரியில் கொடுத்த தனது சான்றுகளை பெற்றுத் தரக்கோரி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தனது இந்த கோரிக்கையை வீடியோவில் வடிவில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். அதில் அந்த மாணவி கூறியதாவது, “எனது பெயர் காயத்ரி, ஈரோடு மாவட்டம் வல்லகவுண்டம் எனும் குக்கிராமத்தில் எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். நான் கடந்த 2019-2020ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பை முடித்தேன். எங்களுடைய வீட்டில் நான் தான் முதல் பட்டதாரி என்பதால் மருத்துவத்துறையை எடுத்து படிக்க விரும்பினேன். மருத்துவத்துறையில் சேர வேண்டும் என்பதற்காக பாராமெடிக்கல் கவுன்சிலிங்காக விண்ணபித்திருந்தேன்.

 

பின்னர் அதில் எனக்கு அரசு கல்லூரி கிடைக்கும் என்று நினைத்து விண்ணப்பித்தேன். ஆனால் தனியார் கல்லூரி தான் கிடைத்தது. அதன் பின்னர் நானும் 30 விருப்ப கல்லூரிகளை விண்ணப்பித்து அனுப்பினேன் அதில்தான் எனக்கு குன்றத்தூர் மாதா கல்லூரியில் இடம் கிடைத்தது.  இந்நிலையில் வேறு வழி தெரியாமல் கடைசி தேதி அன்று கல்லூரிக்கு நேரடியாக சென்றோம். அங்கு அவர்கள் இன்று அட்மிஷன் போட்டால் மட்டுமே கவுன்சிலிங் சீட் இல்லையென்றால் மேனேஜ்மண்ட் சீட் தான் என்று கூறினார்கள். இவ்வாறு கூறியதால் நாங்களும் அட்மிஷன் போட்டுவிட்டு, விடுதியை பார்க்கலமா என்று கேட்டோம் முடியாது என்று கூறிவிட்டார்கள், நாங்களும் வீட்டிற்கு வந்து விட்டோம்.

 

கல்லூரி ஆரம்பித்த நாளன்று என்னை என் பெற்றோர்கள் கொண்டு சென்று விடுதியில் விட்டுவிட்டு வந்தனர். அங்கு விடுதி முழுவதும் மிகவும் குப்பையாக இருந்தது, பெற்றோர்கள் உடனிருந்து கேட்கும் பொழுது அறையை சுத்தம் செய்து தருவோம் என்று கூறினார்கள் ஆனால் அவர்கள் சென்ற பின்பு எதுவும் செய்து தர முடியாது என்று கூறிவிட்டார்கள். அங்கு உணவு, இடம், கழிப்பறை எதுவுமே சரியில்லை அதனால் நான் அப்பாவிற்கு தொடர்புகொண்டு அழுதேன். அப்பாக்கும் இங்கு பணக்கஷ்டம் என்பதால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார். நானும் என்னால் இங்கு இருக்க முடியாது என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டேன். அப்போது அப்பா கல்லூரி தலைமையாசிரிடம்  சான்றுகளை திரும்ப தர சொல்லி பேசினார்.

 

அவரும் 8 லட்சம் பணம் கட்டினால் மட்டுமே திரும்ப தருவோம் என்று கூறிவிட்டார்கள். கல்லூரி கட்டணம் கட்ட முடியாத காரணத்தால் நாங்கள் படிக்க முடியவில்லை என்று கூறியும், அவர்கள் கண்டிப்பாக கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றுகளை திரும்ப தர முடியும் என்று கூறினார்கள். இதனை நாங்கள் டி.எம்.இ மற்றும் பல்கலைக்கழக அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தோம். அவர்கள் புகார் மட்டுமே பதிவு செய்வோம் ஆனால் சான்றுகள் தர சொல்லி கல்லூரியுடன் பேச மாட்டோம் என்று கூறிவிட்டனர். அதன் பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம் அவர்கள் புகார் பதிவு செய்து ரசீதை கொடுத்தார்கள். அதனை வைத்து விடுதியில் உள்ள எனது பொருட்களை எடுத்து வந்தோம்.

 

அதன்பின்பு பல மாதங்கள் கழிந்தது எனது ஒரு வருடம் படிப்பு காலமும் வீணாகிவிட்டது. இப்போது வேறு எதுவும் படிப்பதற்காக சான்றுகள் தேவை ஆனால் எவ்வாறு பெற வேண்டும் என்றே தெரிவியவில்லை. இதற்கு தமிழக முதலமைச்சர் நிச்சயம் உதவி செய்வார்கள் என நம்பி இந்த பதிவில் கோரிக்கை வைத்துள்ளேன்” இவ்வாறு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.