பொங்கல் திருவிழா கொண்டாட்டம் என கல்லூரி மாணவர்கள் சிலர் அரசு பேருந்துகளின் மேற்கூறையில் ஏறிக்கொண்டு அட்டகாசம் செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாநிலக் கல்லூரி மாணவர்கள் சென்னை சென்ட்ரலில் பேருந்தை மறித்ததோடு பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்தனர். அதேபோல் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக வந்த பொழுது சாலையில் பேனர்களை பிடித்தபடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டனர்.
கல்லூரிக்கு ஒன்பது மணிக்குள் வரக்கூடிய கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு கல்லூரிக்கு தாமதமாக வந்ததால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், நுழைவுவாயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டனர். அவர்களை திருப்பி அனுப்பும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இப்பொழுது மாணவர்கள் மீண்டும் சாலையில் அட்டகாசம் செய்தபடி இருந்தனர். உடனடியாக வந்த போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து புரசைவாக்கம் சந்திப்பு அருகே வந்த பொழுது 15 எம் என்ற பேருந்தில் சென்ற மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.