கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த் கிருஷ்ணன், சதீஸ் உட்பட நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
![Pollachi case; two thugs canceled including Thirunavukarasu](http://image.nakkheeran.in/cdn/farfuture/9pS-PaOo0GaF0qps42vtGJccmv5Zou-CzJLUmIFZlQo/1572592626/sites/default/files/inline-images/00z2.jpeg)
தமிழகத்தையே அதிர்ச்சியில் மூழ்கவைத்த இந்த சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 7 பேரில் முக்கிய நபராக கருதப்படும் திருநாவுக்கரசின் தாய் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருத்தனர். இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் பாலியல் வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டம் போடப்பட்டது தவறு என்றும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பு வாதாடியது.
![Pollachi case; two thugs canceled including Thirunavukarasu](http://image.nakkheeran.in/cdn/farfuture/pHle0pMFo0iP25xFDQDX-isKcBWXgLp5TCCrRcS47BQ/1572592639/sites/default/files/inline-images/00z1.jpg)
தொடர் குற்றங்களை செய்தவர்கள் என்ற அடிப்படையில்தான் குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலநூறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்ற புகாரை அடுத்து, சம்பந்தபட்ட பெண்களின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடக்கூடாது என்ற அடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டு 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. எனவே குண்டர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தில் கைது செய்ய பிறப்பித்த உத்தரவின் ஆவணங்கள் உரிய நேரத்தில் பெற்றோர்களிடம் வழங்கப்படவில்லை. அதேபோல் ஆவணங்களில் குறிப்பிட்ட பகுதிகள் தெளிவு தன்மை இல்லமால் உள்ளது எனக்கூறி திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகிய இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.