Skip to main content

உத்தமபாளையம் செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

POLICE RAID IN UTHAMAPALAYAM

 

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் டி.டி.ஆர் பண்ணை வீதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணி. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டுக்கு, இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பின்னர், வீட்டில் இருந்த பணம், நகை, சொத்து ஆவணங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தினர். பாலசுப்ரமணி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு விவரம், அவைகளில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற பணப் பரிமாற்றம் ஆகியவற்றைச் சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, இந்த பாலசுப்பிரமணி ஆண்டிபட்டி, தேவாரம், குன்னூர், பண்ணைபுரம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளில் செயல் அலுவலராக ஏற்கனவே பணிபுரிந்துள்ளார். தற்போது அய்யம்பாளையத்தில் பணியில் உள்ளார். இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன் பேரில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகு இது குறித்து முழு விவரங்கள் தெரியவரும் என்றனர்.

செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்