![Police raid former AIADMK MLA kanitha house](http://image.nakkheeran.in/cdn/farfuture/qmbw6e1sxka2-qFD145ld8tDQzgzBuxvwIeBJG9xkCA/1701340936/sites/default/files/inline-images/999_269.jpg)
செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கணிதா. இவரது கணவர் சம்பத்குமார். அதிமுகவின் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலராக இருந்து வருகிறார். இந்த தம்பதியின் மகன் கோபிநாத்(28). இவர்கள் குடும்பத்துடன் ஆலம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு போலீசார் ஆலப்பாக்கத்தில் உள்ள கணிதா வீட்டில் நுழைந்து சோதனை நடத்தினர்.
கணிதாவின் மகன் கோபிநாத்தும், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த யாசர் என்பவரும், ஒன்றாக இணைந்து பர்னிச்சர் கடை நடந்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கோபிநாத் கடந்த 11 ஆம் தேதி யாசரை தனியார் இடத்தில் வைத்து 4 காசோலைகளில் ரூ.20 லட்சத்திற்கு கையெழுத்து வாங்கியுள்ளார். அத்தோடு, யாசருக்கு கோபிநாத் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து யாசர், கோபிநாத் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோபிநாத் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அதனடிப்படையிலேயே கணிதா வீட்டிலும் நேற்று சோதனை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.