Skip to main content

கள்ள நோட்டுகளை கொடுத்து ஆடு வாங்கிய ஆசாமிகள்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்!!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021
stranger who bought goats by giving counterfeit notes ... Police in serious investigation

 

திண்டிவனம் அருகே போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ஐந்து  ஆடுகளைக் கடத்திச் சென்ற பெண் உட்பட 3 மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி, இவரது மனைவி வசந்தா. இவர் ஆடுகள் வளர்த்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டிற்கு ஓட்டிக் கொண்டு வந்தார். அப்போது விழுப்புரம் மார்க்கத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆட்டோவில் ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் வசந்தாவிடம் ஆடு விலைக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

 

இதற்கு மறுத்த வசந்தாவிடம் தங்கள் வீட்டில் விசேஷம் இருப்பதால் அவசியம் விலைக்குக் கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். உடனே வசந்தா சின்ன ஆடு ரூ.5000 எனவும், பெரிய ஆடு 6 ஆயிரம் ரூபாய் எனவும் கூறியதாகத் தெரிகிறது. ஆட்டோவில் வந்த மர்ம நபர் 5 ஆடுகள் மொத்தம் 24 ஆயிரத்திற்கு தருமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுத்த வசந்தா ஆடுகளை ஓட்டிச் செல்ல முற்பட்டார். உடனே அவரை தடுத்து நிறுத்திய அந்த மர்ம ஆசாமி நீ கேட்ட பணத்தைத் தருகிறேன் நான்கு சின்ன ஆடு, ஒரு பெரிய ஆடு தருமாறு கூறியதையடுத்து அந்த மர்ம நபர் 5 ஆடுகளையும் தாங்கள் வந்த ஆட்டோக்களில் ஏற்றியுள்ளார். பின்னர், தான் வைத்திருந்த 13, 2000 ரூபாய் நோட்டுகளை வசந்தாவிடம் கொடுத்து நீ கேட்ட பணம் 26,000 பெற்றுக் கொள் எனக்கூறிக் கொடுத்துள்ளார்.

 

பின்னர் பத்திரமாக வீட்டுக்கு எடுத்துச் செல் என்று கூறி அங்கிருந்து திண்டிவனம் மார்க்கமாக ஆட்டோ சென்றது. கேட்ட பணம் முழுவதுமாக கொடுத்ததால் சந்தேகமடைந்த வசந்தா ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வீட்டிலிருந்த தனது மகள் பூங்குழலியிடம் ரூபாயைக் காண்பித்து சந்தேகம் கேட்டுள்ளார். அந்த ரூபாய் நோட்டை வாங்கிப் பார்த்த அவரது மகள், "நீ வாங்கி வந்த நோட்டுக்களில் எட்டு நோட்டுகள் ஒரே எண் கொண்டதும், மீதமுள்ள நோட்டுகள் ஒரே எண் கொண்ட கலர் ஜெராக்ஸ்" எனக் கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த வசந்தா தனது சந்தேகத்தை உறுதி செய்ய நெடுஞ்சாலையில் உள்ள கோழிக் கடையில் அந்த ரூபாயில் ஒரு நோட்டிற்கு சில்லரை கேட்டுள்ளார்.

 

அதனை வாங்கிப் பார்த்த கோழிக் கடை வியாபாரி, இந்த நோட்டு போலி எனக் கூறியதையடுத்து மயிலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் வசந்தாவின் வீட்டுக்கு வந்து நடந்த விவரங்களைச் சேகரித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ஆடுகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Boy incident by electrocution Chief Minister MK Stalin obituary

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தேவேந்திரன் என்பவர், அப்பகுதியில் உள்ள அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது சிறுவன் தேவேந்திரன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயம் போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.

மேலும் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் தேவேந்திரன் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு! 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
CV Shanmugam sudden meeting with pmk founder Ramadoss

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்ய பாமக நிறுவனர் ராமதாஸுகு அதிகாரம் வழங்கியும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் கூட குறைந்தது 7 இடங்களில் பாமக வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி தனித்து போட்டியிட இப்பொழுது பாமக தயாராக இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. திடீரென சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. நேற்று (05.02.2024) இரவு 7 மணியளவில் ராமதாஸ் வீட்டுக்கு சென்ற சி.வி. சண்முகம் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பானது சுமார் 35 நிமிடங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அதிமுக கூட்டணியில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.