Skip to main content

பெண் எஸ்.ஐ. - காவலர் இடையே டிஷ்யூம்...டிஷ்யூம்! சேலம் காவல்துறையில் பரபரப்பு! 

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

police incident in salem district


வாழப்பாடி மகளிர் காவல்நிலைய பெண் எஸ்.ஐ.க்கும், பெண் காவலருக்கும் இடையே வலுத்துள்ள நீயா? நானா? மோதல் விவகாரம், மாவட்டக் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருபவர் மல்லிகா (வயது 49). இங்கு, 4 தலைமைக் காவலர்களும், 6 முதல்நிலைக் காவலர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் முதல்நிலைக் காவலர் சசிகலா மீது, எஸ்.ஐ. மல்லிகா கடந்த மே மாதம் 15- ஆம் தேதி, மாவட்ட எஸ்.பி.,க்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார்.

 

அதில் கூறியுள்ளதாவது, "முதல்நிலைக் காவலர் சசிகலா, துறை ரீதியான பணிகளை சரிவர செய்வதில்லை. சக காவலர்களிடமும், என்னிடமும் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார். புகார் கொடுக்க வரும் பொதுமக்களைத் திட்டியும், மிரட்டியும் வருகிறார். 

 

கடந்த பிப்ரவரி 18 மற்றும் 19- ஆம் தேதிகளில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணி முடிந்து, காவல்நிலையம் வராமல் வீட்டிற்கு ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இது தொடர்பாக வாழப்பாடி டி.எஸ்.பி. விளக்கம் கேட்டபோது, எஸ்.ஐ.யிடம் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக ஓய்வுக்குச் சென்று விட்டேன் என்றும், இனி இதுபோல் தவறு நடக்காது என்றும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். 

 

இந்நிலையில், கடந்த மார்ச் 12- ஆம் தேதி மருத்துவ விடுப்பு வேண்டும் என்றார். உடல்நிலை பாதிப்பு குறித்து மனுவாக எழுதிக் கொடுக்குமாறு சொன்னதற்கு அவர் மறுத்துவிட்டார். அவர், தான் அமர்ந்து இருந்த பிளாஸ்டிக் சேரை தள்ளி விட்டு, நீ என்ன யோக்கியமா? நீ எல்லாம் லீவுல போவதில்லையா? என்று என்னை ஒருமையில் திட்டினார். 

 

விடுப்பு வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அதன்பிறகு, அவருக்கு விடுப்பில் செல்ல அனுமதித்தேன். அவருடைய ஒங்கீனமான நடவடிக்கைகள் கண்ணியமிக்க காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துவது போல் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

இந்தப் புகார் தொடர்பாக வாழப்பாடி மகளிர் காவல்நிலைய வட்டாரத்தில் விசாரித்தபோது, பெண் எஸ்ஐ மல்லிகா மீதும் பல்வேறு புகார்கள் சொல்லப்பட்டன. 

 

வாழப்பாடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி, நான்கு மாதங்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். அப்போது ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, சென்ட்ரி எனப்படும் நிலைய 'பாரா' பணி பார்க்கும் பெண் காவலர்களிடம் 30 மணி நேரம் வரை தொடர்ச்சியாக வேலை வாங்கியுள்ளார் எஸ்.ஐ. மல்லிகா. 

 

பொதுவாக சென்ட்ரி பணிக்கு வரும் காவலர்கள் காலை 8 மணி முதல் மறுநாள் காலை 08.00 மணி வரை 24 மணி நேரம் காவல் பணியில் இருக்க வேண்டும். சங்கீதா என்ற பெண் காவலர், காலை 08.00 மணிக்கு சென்ட்ரி பணிக்கு வந்தால், அவரை கம்ப்யூட்டரில் சிஎஸ்ஆர் ரசீது தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுத்தி உள்ளார். இப்பணிகளை முடித்துவிட்டு மாலை 06.00 மணிக்கு மேல் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதாவது, 30 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பணியாற்ற வைத்துள்ளார். 

 

கடும் பணிச்சுமை மற்றும் எஸ்ஐ மல்லிகாவின் விரட்டல் காரணமாக பெண் காவலர்கள் அடிக்கடி மருத்துவ விடுப்பிலும் சென்றுள்ளனர். பெண் காவலர் சசிகலா மீதான புகார் குறித்து அவரிடம் பேசினோம்.''எனக்கும், மல்லிகா எஸ்.ஐ.க்கும் எந்த வித தனிப்பட்ட விரோதமும் கிடையாது. ஆனால், என் மீது சில உள்நோக்கத்துடன் அவர் எஸ்.பி.யிடம் பொய்யான அறிக்கை அளித்துள்ளார். 

 

police incident in salem district

 

கடந்த 2021- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை, மருத்துவ பரிசோதனை செய்வதற்காக  சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அங்கு மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர், சிறுமிகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அவரை தங்க வைக்க எந்த காப்பகத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. 

 

அதன்பின்னர், வாழப்பாடி டி.எஸ்.பி. முத்துசாமி அறிவுரையின்பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணை அவருடைய பெற்றோருடன் அனுப்பி வைத்துவிட்டு, அதிகாலை 02.30 மணியளவில் வீட்டுக்குச் சென்றேன். அன்று காலை 09.00 மணிக்கு பணிக்கு வந்த நான் அதிகாலையில்தான் பணி முடிந்து ஓய்வுக்குச் சென்றேன். 

 

மறுநாள், என்னை செல்போனில் தொடர்பு கொண்ட மல்லிகா எஸ்.ஐ., டி.எஸ்.பி. கேட்டால் நீயும், நானும் சேலம் ஜி.ஹெச்சில் இருப்பதாகச் சொல்லும்படி கூறினார். அதேநேரம், என் செல்போனுக்கு வந்த டி.எஸ்.பி., என்னிடம் எங்கே இருக்கீங்க என்று கேட்டார். நான் வீட்டில் இருப்பதாக உண்மையைச் சொன்னேன். 

 

சிறிது நேரத்தில் மீண்டும் என்னை தொடர்பு கொண்ட எஸ்.ஐ., மல்லிகா, 'எதற்காக டி.எஸ்.பி.யிடம் உண்மையைச் சொன்னீங்க? அவருடைய ஃபோனை எடுக்காமல் இருந்திருக்கலாம்ல? போச்சா... இன்னிக்கும் மாட்டிக்கிட்டேனா...?,' என்று சொல்லிவிட்டு, பேச்சை துண்டித்து விட்டார். 

 

இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவர் என்னை உள்நோக்கத்துடன் நடத்தத் தொடங்கினார். நான் மருத்துவ விடுப்பு கேட்டபோது, உங்கள் விடுப்பை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதையடுத்து, மருத்துவரிடம் சிக் பாஸ்போர்ட் வாங்கி வந்த பிறகு, டி.எஸ்.பி. சொன்னதால்தான் விடுப்பு கொடுப்பேன் என்றார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், விடுப்பு தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லவும் இல்லை... நாற்காலியை பிடித்து இழுக்கவும் இல்லை. 

 

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை முடித்துவிட்டு பணியில் இருந்த ஏட்டு வைரமணி அறிவுறுத்தலின் பேரில்தான் நானும், சங்கீதாவும் ஓய்வுக்குச் சென்றோம். ஆனால் என்னை வேண்டுமென்றே, டி.எஸ்.பி .அலுவலகத்தில் நிற்க வைத்தார் மல்லிகா எஸ்.ஐ., 

 

அங்கு, ஒன்றரை மணி நேரம் கண்ணீருடன் முறையிட்ட பிறகும் கூட, எஸ்.ஐ. அனுமதியின்றி தன்னிச்சையாக ஓய்வுக்குச் சென்றதாக எழுதிக் கொடுத்தால்தான் பணிக்கு அழைத்துக் கொள்வோம் என்றதால், அதன்படியே எழுதிக் கொடுக்க வேண்டியதாகியது. இப்போது அந்த விளக்கக் கடிதத்தையே, என் மீதான புகாருக்கு ஆதாரமாக சொல்லி இருக்கிறார் எஸ்.ஐ., மல்லிகா,'' என்றார் காவலர் சசிகலா. 

 

இது தொடர்பாக எஸ்.ஐ. மல்லிகாவிடம் கேட்டபோது, ''காவலர் சசிகலா சின்ன புள்ள. அறிந்தும் அறியாமலும் செய்கிறார். அந்தப் பொண்ணோட கெட்ட நேரமோ என்னவோ ஒரு தவறு நடந்துவிட்டது. எல்லாம் ஒரு குடும்பமாக இருக்கணும். அவரால் நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறோம். எல்லாவற்றையும் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாதுங்க சார். 

 

அதிகாரிகளிடம் பணிந்துதான் போகணும். இரு நாள்களுக்கு முன்பும் கூட இன்ஸ்பெக்டரிடம் தற்கொலை செய்து கொள்வதாகவும், வேலை வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறார். ஆள் இல்லைனு வேலை பார்க்கச் சொன்னால் ஷார்ட் டெம்பர் காரணமாக டென்ஷன் ஆகிவிடுவார். அந்தப் பொண்ணு சரியாக பேசக்கூடிய பொண்ணு இல்லீங்க சார். டி.எஸ்.பி. போன் செய்தால் நானும் ஜி.ஹெச்சில் இருப்பதாகச் சொல்லச்சொன்னதாக சொல்வதில் உண்மை இல்லை,'' என்றார். 

 

இதுபற்றி காவல் ஆய்வாளர் தனலட்சுமியிடம் கேட்டபோது, ''ஆள்கள் கம்மியாக இருப்பதால் சென்ட்ரி டூட்டி கூடுதல் நேரம் பார்க்க வேண்டியதாகிறது. எல்லோருக்கும் விடுப்பு, ஓய்வு வழங்குகிறோம். எஸ்.ஐ. மல்லிகா, காவலர் சசிகலா மீது என்ன ரிப்போர்ட் அனுப்பினார் என்று எனக்குத் தெரியாது. அப்போது நான் மருத்துவ விடுப்பில் இருந்தேன். சசிகலா பணியில் சரியாக இருப்பார். ஆனால், கொஞ்சம் ஷார்ட் டெம்பர்,'' என்று பட்டும் படாமலும் சொன்னார்.  

 

பெண் எஸ்.ஐ.க்கும், முதன்மைக் காவலருக்கும் இடையே நடக்கும் பனிப்போர், சேலம் மாவட்டக் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.