Skip to main content

கொள்ளையனை தூங்க வைத்த டி.ஆர்; திருட வந்த இடத்தில் சுவாரஸ்யம்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

police have arrested thief who fell asleep listening T rajendar song place theft.

 

திருட வந்த இடத்தில் டி.ஆர் பாடலைக் கேட்டு அசந்து தூங்கிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் தற்பொழுது காரைக்குடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பாண்டியன் தன் சொந்த ஊரான நடுவிக்கோட்டைக்கு திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். மேலும், இங்கு குடும்பத்தோடு வந்து தங்கினால் வீட்டில் சமைப்பதற்கான பாத்திரங்கள் மற்றும் குத்து விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு பாண்டியன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த வீட்டுக்குள் இருக்கும் ஒரு அறை மட்டும் உள்பகுதியில் பூட்டப்பட்டிருந்தது. மேலும், அந்த அறைக்குள் திருடன் இருப்பதை உறுதி செய்த அப்பகுதி மக்கள் வீட்டின் உரிமையாளர் பாண்டியனுக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

 

அதற்குள் இந்த தகவல் ஊருக்குள் பரவ அனைவரும் மிளகாய்ப் பொடி, கம்பு கட்டையுடன் வீட்டைச் சுற்றி வளைத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசும் பாண்டியன் குடும்பத்தினரும் மூடப்பட்டிருந்த மற்றொரு கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது அந்த அறையில் மது போதையில் இருந்த நபர் ஒருவர், அங்கிருந்த கட்டிலில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து, போலீசார் அவரை எழுப்பி விசாரித்ததில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் மேலச்சேந்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த சுதந்திர திருநாதன் என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற நிலையில், சமீபத்தில் தான் ரிலீஸாகி வந்துள்ளார். இதனிடையே, பூட்டிக் கிடந்த வீட்டை நோட்டமிட்ட சுதந்திர திருநாதன், ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி வீட்டிற்குள் இருந்த பாத்திரங்கள், குத்துவிளக்கு, மின்விசிறி, வெண்கலப் பொருட்கள் என அனைத்தையும் சாக்குப் பையில் பத்திரமாகக் கட்டி வைத்துள்ளார்.

 

அதன்பிறகு, மது அருந்திய சுதந்திர திருநாதன், ஹெட்ஃபோனில் TR ராஜேந்தரின் காதல் பாடல்களைக் கேட்டுக்கொண்டு, அங்கிருந்த மெத்தையில் சுதந்திரமாகத் தூங்கியுள்ளார். இவர், ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கியதால் வெளியே சத்தம் போட்டது கேட்கவில்லை என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சுதந்திர திருநாதனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், சிவகங்கை மக்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.