Skip to main content

காவல் மரண வழக்கு: சேலம் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடக்கம்

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Police death case: Salem CBCID police begin investigation!

 

காவல்துறையினர் சித்ரவதை செய்ததால் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இறந்ததாகக் கூறப்படும் வழக்கில், சேலம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

சேலத்தை அடுத்த கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி கம்சலா (40). 

 

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் எல்லையில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாகத் தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார் (35) என்பவரை சேந்தமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி திருட்டு வழக்கு தொடர்பாக பிரபாகரன், அவருடைய மனைவி கம்சலா ஆகியோரையும் கைது செய்து, நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர். 

 

திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரபாகரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி காவல்துறையினர் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால்தான் பிரபாகரன் இறந்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

இதையடுத்து, சேந்தமங்கலம் எஸ்ஐ சந்திரன், காவலர் குழந்தைவேல் மற்றும் புதுச்சத்திரம் பெண் எஸ்.ஐ. பூங்கொடி ஆகிய மூன்று பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டது. 

 

இதையடுத்து, சேலம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணன், இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளார். பிரபாகரன் இறந்தது தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை செய்தார். விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. கிருஷ்ணனுக்கு உதவியாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் பிரபா, சேலம் சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர்கள் பால்ராஜ், சாரதா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

இந்த வழக்கின் முக்கிய ஆவணமாக பிரபாகரனின் உடற்கூராய்வு அறிக்கை கருதப்படுகிறது. அந்த அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை இருக்கும் எனத் தெரிகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.