மது அருந்துபவர்கள், பள்ளி கட்டடங்கள், சாலையோர நிழற்கூடங்கள், செயல்படாமல் இருக்கும் அரசு கட்டடங்கள், மர நிழல்கள், வயல்வெளிகள் என பொது இடங்களில் மது அருந்துவதால் பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை என்றும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கிறது என்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்குப் பல்வேறு புகார்கள் வந்தன.
அதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு பகுதி மக்களும் தொடர்புகொள்ள ஏதுவாக காவல் உதவி எண்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதில் கடலூர் - 9498100552,
சிதம்பரம் - 9498100561,
நெய்வேலி - 9498100578,
பண்ருட்டி - 9498100597,
தனிப்பிரிவு - 04142 284333,
விருத்தாச்சலம் - 9498100571,
சேத்தியாத்தோப்பு - 9498100588,
திட்டக்குடி - 9498100605,
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு - 04142284353 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயின் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ஆதி உள்ளிட்ட போலீசார் நேற்று (28.09.2021) விருத்தாசலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடலூர் ரோடு, பாலக்கரை, கடைவீதி, ஜங்ஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய 25 நபர்களை உடனடியாகப் பிடித்து விருத்தாசலம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். முதல்முறை என்பதால் எச்சரிக்கையுடன் அனுப்புகிறோம். இனிமேல் யாரும் பொது இடங்களில் மது அருந்தக்கூடாது. அதுபோல் கடைகளின் முன்பு மது அருந்தினால், அந்தக் கடையின் உரிமையாளர்தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும், அவர்களைக் கைது செய்வதோடு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து அனுப்பிவைத்தனர்.