Skip to main content

வாலிபர் உயிரிழப்பு; மறியல் செய்த மக்கள் மீது போலீஸ் தடியடி

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

police batoned participated picketing Villupuram

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான முனியப்பன். பட்டதாரியான இவரது மகன் விஜய்(23) என்கிற கார்த்தி  நேற்று மதியம் 2:30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் திருவக்கரை ரோஜா குட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பெரும்பாக்கத்தில் இருந்து திருவக்கரைக்கு நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று கார்த்திக்கின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். லாரியை ஓட்டிச் சென்ற புதுச்சேரி சோம்பட்டு பகுதியைச் சேர்ந்த தினகரன்(46) காயம் என்று தப்பினார்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வானூர் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் கார்த்திக் உடலை மருத்துவ பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திக் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இப்பகுதியில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருவதால் அந்த குவாரிகளுக்கு ஜல்லி, கிராவல், எம்சாண்டல், ஏற்ற வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இப்படிப்பட்ட லாரிகளால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் மாண்டு போகின்றன. எனவே அதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.

 

கோட்டகுப்பம் ஏ.எஸ்.பி பொறுப்பு அபிஷேக் குப்தா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் திருப்தி அடையாத அப்பகுதி பொதுமக்கள் கார்த்திக் உடலை எடுத்துச் செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

சம்பவ இடத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, ஏ.டி.எஸ்.பி திருமால், டி.எஸ்.பி பார்த்திபன் உட்பட அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் இப்பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும். இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் கூறி விரைவில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகே கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து வானூர் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

 

சமீபத்தில் இதேபோன்று கருங்கல் ஜல்லி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதியதில் கேணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தந்தை மகள் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திருவக்கரை ,வானூர், பகுதிகளில் கருங்கல் குவாரிகளுக்கு லோடு ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.