![Police action on Worker who threatened women by making obscene videos](http://image.nakkheeran.in/cdn/farfuture/DY329k-uko4PrjBCiDiODWUsPR1ynolkgK_n34UDluI/1712385172/sites/default/files/inline-images/inve%20ni_15.jpg)
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (42). இவர் அங்குள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பாரதிராஜாவுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இவர் பல பெண்களுடன் பழகி வந்துள்ளதாகவும், அவர்களுடன் தனியே இருக்கும் போது, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அந்த பெண்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட சில பெண்கள், பாரதிராஜாவுடன் இது தொடர்பாக வாக்குவாதம் செய்து வந்துள்ளனர்.
அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாற, இந்த சம்பவம் குறித்து பாரதிராஜா மீது அந்த பெண்கள், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில், பாரதிராஜாவின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது, அதில் ஏராளமான பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாரதிராஜாவை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.