“உங்க காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் இனிமேல் கடைய திறக்காதீங்க'' எனப் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்காக பாமக எம்.எல்.ஏ. செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் மேற்கு தொகுதியில் முத்துநாயக்கன்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நீண்ட காலமாக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ளதால் அந்த வழியே செல்லும் பொதுமக்களுக்கு போதை ஆசாமிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் அப்பகுதியைக் கடந்து செல்லும்போது குடிபோதையில் சிலர் அங்கேயே விழுந்து கிடக்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, கடந்த மாதம் சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருள் தலைமையில் அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாதத்தில் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
அதிகாரிகள் கேட்ட ஒரு மாத கால அவகாசம் கடந்த திங்கட்கிழமையோடு நிறைவு பெற்றது. ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதைக் கேள்விப்பட்ட பாமக எம்.எல்.ஏ அருள் அப்பகுதி மக்களை அழைத்துக்கொண்டு நேராக அந்த டாஸ்மாக் கடைக்குச் சென்றார்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கடை ஊழியர்களின் காலில் விழுந்த பாமக எம்.எல்.ஏ ''உங்க அதிகாரிகிட்ட சொல்லுங்க... நாளைக்கு இந்தக் கடையை திறக்காதீங்க, உங்க காலில் விழுந்து கெஞ்சிக் கேக்குறேன், ரொம்ப அசிங்கமா இருக்குதுங்க...'' எனத் தெரிவித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரை எழுந்திருக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.