
தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு டெல்லியில் இருந்து காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதேபோல், ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை ரூபாய் 700 கோடியில் முடிக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய்ப் பதிக்கும் திட்டத்தையும் தொடங்கிவைத்த பிரதமர், சென்னை மணலி பெட்ரோலிய நிறுவனத்தில் கேசோலின் சல்ஃபர் நீக்கப்பிரிவு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூபாய் 500 கோடியில் உருவாக்கப்பட்ட கேசோலின் சல்ஃபர் நீக்க வளாகத்தின் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாகை மாவட்டத்தில் காவிரிப்படுகை எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை ஆண்டுக்கு 9 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த திட்டம் ஐ.ஓ.சி.எல். மற்றும் சி.பி.சி.எல். நிறுவன கூட்டு முயற்சியாக ரூபாய் 31,500 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்துகொண்டனர்.