Skip to main content

நடிகர் அஜித் உட்பட பல பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்... காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!! 

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

From Actor Ajith to more celebrities, a person make a bomb threaten..... Action taken by the police

 

சென்னையில் உள்ள தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி மூலம் பேசிய மர்ம நபர் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும் என்றும் கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை உடனே துண்டித்துவிட்டார். இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்குப் போலீசார் விரைந்து சென்று  அவரது வீட்டில் எங்காவது வெடிகுண்டு அல்லது வெடிக்கும் தன்மைகொண்ட பொருள் ஏதாவது இருக்கிறதா என்று சல்லடை போட்டு சோதனை நடத்தினார்கள்.

 

அப்படி சோதனை நடத்தியதில் அஜித்குமார் வீட்டில் இருந்து எந்த வெடிபொருட்களும் சிக்கவில்லை. அதன்பிறகு தொலைபேசியில் வந்த தகவல் வெறும் புரளி என்பதைப் போலீசார் அறிந்தனர். இருந்தபோதிலும் அஜித் குமார் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அந்த மர்ம நபரின் ஃபோன் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சென்னை நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு, மர்ம தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட செல்ஃபோன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்படி மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 26) என்பது தெரியவந்தது. அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

From Actor Ajith to more celebrities, a person make a bomb threaten..... Action taken by the police

 

மேலும், இந்த புவனேஸ்வரன் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா இப்படி பல்வேறு பிரபலங்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக அவ்வப்போது மிரட்டல் விடுத்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது சம்பந்தமான வழக்கில் ஏற்கெனவே போலீசார் அவரை கைது செய்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் ஜாமீனில் விடுவித்துள்ளனர். அதன்பிறகும் தொடர்ந்து பிரபலங்களின் வீடுகளுக்கு அவ்வப்போது தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவருவது தொடர்ந்துகொண்டே இருந்ததால், இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரனுக்கு 100 என்ற எண் மட்டுமே அவரது நினைவில் உள்ளது. அவரது கையில் யாருடைய செல்ஃபோனாவது கிடைத்துவிட்டால் போதும், உடனடியாக 100 என்ற தொலைபேசி எண்ணை நினைவில் வைத்துக்கொண்டு அந்த எண்ணுக்கு டயல் செய்து, இதுபோன்று பிரபலங்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மிரட்டல் விடுக்கிறார். 

 

இவரை இனிமேல் அப்படியே விட்டுவைத்தால் பிரச்சினை மேலும் சிக்கலாகும். எனவே விரைவில் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு உத்தரவிடுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி புவனேஸ்வரனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளதாக விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ள பிரபலங்களுக்கு மனநலம் பாதித்த இளைஞர் புவனேஸ்வரன் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவருவதும், இது தமிழக அளவில் பத்திரிக்கை, ஊடகங்களில் பரபரப்பாக வெளிவருவதும் தொடர் சம்பவங்களாக இருந்துவந்தது. இதனால் காவல்துறைக்குப் பெரும் சிக்கலையும் அவஸ்தையையும் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.