Skip to main content

நடிகர் அஜித் உட்பட பல பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்... காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!! 

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

From Actor Ajith to more celebrities, a person make a bomb threaten..... Action taken by the police

 

சென்னையில் உள்ள தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி மூலம் பேசிய மர்ம நபர் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும் என்றும் கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை உடனே துண்டித்துவிட்டார். இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்குப் போலீசார் விரைந்து சென்று  அவரது வீட்டில் எங்காவது வெடிகுண்டு அல்லது வெடிக்கும் தன்மைகொண்ட பொருள் ஏதாவது இருக்கிறதா என்று சல்லடை போட்டு சோதனை நடத்தினார்கள்.

 

அப்படி சோதனை நடத்தியதில் அஜித்குமார் வீட்டில் இருந்து எந்த வெடிபொருட்களும் சிக்கவில்லை. அதன்பிறகு தொலைபேசியில் வந்த தகவல் வெறும் புரளி என்பதைப் போலீசார் அறிந்தனர். இருந்தபோதிலும் அஜித் குமார் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அந்த மர்ம நபரின் ஃபோன் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சென்னை நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு, மர்ம தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட செல்ஃபோன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்படி மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 26) என்பது தெரியவந்தது. அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

From Actor Ajith to more celebrities, a person make a bomb threaten..... Action taken by the police

 

மேலும், இந்த புவனேஸ்வரன் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா இப்படி பல்வேறு பிரபலங்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக அவ்வப்போது மிரட்டல் விடுத்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது சம்பந்தமான வழக்கில் ஏற்கெனவே போலீசார் அவரை கைது செய்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் ஜாமீனில் விடுவித்துள்ளனர். அதன்பிறகும் தொடர்ந்து பிரபலங்களின் வீடுகளுக்கு அவ்வப்போது தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவருவது தொடர்ந்துகொண்டே இருந்ததால், இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரனுக்கு 100 என்ற எண் மட்டுமே அவரது நினைவில் உள்ளது. அவரது கையில் யாருடைய செல்ஃபோனாவது கிடைத்துவிட்டால் போதும், உடனடியாக 100 என்ற தொலைபேசி எண்ணை நினைவில் வைத்துக்கொண்டு அந்த எண்ணுக்கு டயல் செய்து, இதுபோன்று பிரபலங்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மிரட்டல் விடுக்கிறார். 

 

இவரை இனிமேல் அப்படியே விட்டுவைத்தால் பிரச்சினை மேலும் சிக்கலாகும். எனவே விரைவில் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு உத்தரவிடுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி புவனேஸ்வரனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளதாக விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ள பிரபலங்களுக்கு மனநலம் பாதித்த இளைஞர் புவனேஸ்வரன் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவருவதும், இது தமிழக அளவில் பத்திரிக்கை, ஊடகங்களில் பரபரப்பாக வெளிவருவதும் தொடர் சம்பவங்களாக இருந்துவந்தது. இதனால் காவல்துறைக்குப் பெரும் சிக்கலையும் அவஸ்தையையும் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.