Skip to main content

“பெரியார் இந்து மக்கள் யாவருக்குமான எதிரி என அவதூறு பரப்புகின்றனர்”  - தொல். திருமாவளவன்! 

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

"Periyar distorts the facts and spreads slander as the enemy of all Hindu people" - Thirumavalavan

 

பெரியார் பிறந்த தினமான இன்று சமூக நீதி நாளாகத் தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் அது குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

 

அந்த அறிக்கையில் அவர், “தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர்-17,  இனி ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ எனக் கொண்டாடப்படும். அத்துடன், இந்நாளில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட யாவரும் 'சமூகநீதி நாள் உறுதிமொழி' ஏற்பார்கள். 

 

இதனைத் தமிழக முதல்வர், செப்டம்பர்- 06 அன்று சட்டப்பேரவையில் பெருமிதம் பொங்க அறிவித்தார். அவர் பெரியாரின் பாசறையில், அண்ணாவின் அரவணைப்பில், கலைஞரின் வழிகாட்டுதலில் சமூகநீதி கொள்கை ஈர்ப்பால் வளர்ந்த 'திராவிட வார்ப்பு' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அத்துடன், இந்த அரசு  'பெரியார் அரசு அல்லது சமூகநீதி அரசு'  என்பதை ஊருக்கு- உலகுக்கு உரத்துச் சொல்லும் புரட்சிகரமான அறிவிப்பாகும். இது சனாதன- பழமைவாத - சமூகநீதிக்கு எதிரான பிற்போக்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணிகரமான நிலைப்பாடாகும். முதல்வரின் இந்தக் கொள்கைத் துணிவை விசிக சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம். 

 

கடந்த ஆண்டுகளில்  பெரியாரின் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகக் கொண்டாடி வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்கிற முறையில், அதிகாரப் பூர்வமாக எமது கோரிக்கை நிறைவேறியிருக்கிறது என்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியால் இறும்பூது எய்துகிறோம்.

 

பெரியாரின் வாழ்நாள் போராட்டம் சமூகநீதிக்காகவே என்பது யாவருமறிந்த ஒன்றாகும். அவரின் எழுத்தும், பேச்சும், இயங்கிய மூச்சும்; அவர் செலவிட்ட ஒவ்வொரு நொடியும், எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும், விளிம்புநிலை மக்களுக்கான, சமூகநீதிக்காகவே என்பது ஊரறிந்த - உலகறிந்த ஒன்றாகும்.  பெரியார் என்றால் சமூகநீதி; சமூகநீதி என்றால் பெரியார் எனக் காலத்தால் அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு அவர் சமூகநீதியின் வடிவமாகவே விளங்கியவர்; இயங்கியவர். அத்தகைய பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது ஒரு தனிநபரைப் போற்றிப் புகழ்ந்து கூத்தாடுவது என்றாகாது; மாறாக, சமூகநீதி எனும் உயரிய கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துக் களமாடுவதே ஆகும். அதாவது, சமூகநீதியைக் கூர்மைப்படுத்திச் செழுமைப்படுத்துவதற்கான, மென்மேலும் அதனை வலிமைப்படுத்துவதற்கான அளப்பரிய வாய்ப்பை வழங்கும் கொண்டாட்டமாகவே இது அமையும்.

 

பெரியார் என்றால் கடவுள் மறுப்பு, பார்ப்பன வெறுப்பு  என்றெல்லாம் அடையாளப்படுத்துவோருக்கிடையில், அவரை சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான அடையாளமென நிலைப்படுத்துகிற தமிழக அரசின் இந்தப் புரட்சிகர நடவடிக்கைப் போற்றுதலுக்குரியதாகும். சமூகநீதி என்பது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமையாய்ப் பெறுகிற இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இது சமத்துவத்தை வென்றெடுக்கும் சனநாயக வழியிலான அறப்போருக்குரிய கருத்தியல் பேராயுதமாகும். அதாவது, சமத்துவ இலக்கை எட்டுவதற்கான நெறிமுறை ஜனநாயகமென்றால், அத்தகைய ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறையே சமூகநீதியாகும்.

 

இத்தகைய சமத்துவத்தை இலக்காகக் கொண்டு சமரசமின்றி இறுதிவரை சமர் புரிந்த பெரியார், சமத்துவத்தின் நேர்ப் பகையான சனாதனத்தை வெகுமக்களிடையே அடையாளப்படுத்துவதையும் அம்பலப்படுத்துவதையுமே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு ஓய்வின்றி சலிப்பின்றி களமாடினார். சனாதனம் தான் அவரது ஒரே பகை! சனாதனத்தை வேரறுப்பதுதான் அவரது ஒரே குறிக்கோள்! சனாதனத்தை வேரறுத்து வீழ்த்தாமல் சமத்துவத்தை வென்றெடுக்க இயலாது என்பதை உணர்ந்ததால் தான், அவர் சனாதன சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை அம்பலப்படுத்துவதிலேயே மிகவும் தீவிரமாக இருந்தார். சனாதன எதிர்ப்பிலிருந்துதான் பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் எதிர்ப்பும் உத்திகளாக அமைகின்றன.

 

பிறப்பின் அடிப்படையில் மனிதருக்கிடையில் உயர்வு - தாழ்வைக் கற்பித்து அதனை நிலைப்படுத்திய கோட்பாடு தான் சனாதனம். இந்தப் பாகுபாட்டுக்கு அவரவரின் முன்வினை அல்லது முற்பிறப்பின் வினை என்னும் கர்மாவே காரணமென்றும் அவற்றை இறைவனே தீர்மானிக்கிறான் என்றும் கொள்கைகளை வரையறுத்து அவற்றைப் பரப்பி,  அதனால் இன்றுவரை பயன் துய்ப்பவர்கள் பார்ப்பனர்களே  என்று அவர்களை அடையாளப்படுத்தியதும் அம்பலப்படுத்தியதும் பெரியார்.

 

ஆகவேதான் அவர்மீது எதிர்வினையாகத் தொடர்ந்து வெறுப்பை உமிழ்கின்றனர். உண்மைகளைத் திரித்து அவர் இந்து மக்கள் யாவருக்குமான எதிரி என அவதூறு பரப்புகின்றனர். அதாவது, பார்ப்பன சமூகத்தின் நீண்டகால உழைப்புச் சுரண்டலைத் தான் அம்பேத்கரும் பெரியாரும் தமது இறுதி மூச்சுவரை எதிர்த்தனர். ஆனாலும் பெரியாரைக் குறிவைத்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவதூறுகளை அள்ளி இறைத்து வருகின்றனர். ஆரியர் அல்லது பார்ப்பன ஆதிக்க சக்திகளின் இத்தகைய பெரியார் எதிர்ப்பே, காலப்போக்கில் திமுக எதிர்ப்பாகவும் திராவிட அரசியல் எதிர்ப்பாகவும் விரிவடைந்துள்ளது. திமுகவை அதன் தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து விமர்சிப்பது என்பது வேறு; அதன் சமூகநீதி கோட்பாட்டு அரசியலிலிருந்து விமர்சிப்பது என்பது வேறு.

 

அடிப்படையில், அவர்கள் சமூகநீதி எதிர்ப்பிலிருந்தே பெரியாரையும், பெரியார் எதிர்ப்பிலிருந்தே திமுக மற்றும் திராவிட அரசியலையும் எதிர்க்கிறார்கள். இந்நிலையில்தான் தமிழக அரசு பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாள் என அறிவித்துள்ளது. இது சனாதனத்துக்கு எதிராகச் சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு கோட்பாட்டு யுத்தமே ஆகும்.

 

எனவே, இன்று எனது அறைகூவலையேற்று சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இந்த கோட்பாட்டு அறப்போரில்  களமிறங்கி உறுதிமொழியேற்ற என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் யாவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.