Skip to main content

அதிவிரைவு ரயிலில் ஆபத்தான பயணம்; கோரிக்கை வைக்கும் மக்கள்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
People traveling dangerously on Tiruchendur-Chennai high speed train

சென்னை - எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதையை விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியை மெயின் லைன் என்றும், விருத்தாசலம் வழியை காட் லைன் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.

இதில் மெயின் லைனில் பல ரயில்கள் இயக்கப்பட்டாலும்  திருச்செந்தூர் - சென்னை எழும்பூருக்கு   மெயின் லைனில்  திருச்செந்தூர் அதிவிரைவு  ரயில்  தினமும் இருவழி மார்க்கமாக சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக இயக்கப்பட்டு வருவது 10-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. 

இந்த ரயில் திருச்செந்தூரில்  இரவு  8.25  மணிக்கு புறப்பட்டு  கும்பகோணம், மயிலாடுதுறை,  சிதம்பரம், கடலூர்,  உள்ளிட்ட  ஊர்களுக்கு அதிகாலையில் வருகிறது.  சென்னைக்கு காலை 10 மணிக்குள் சென்றுவிடுகிறது  அதே நேரத்தில்  மாலை 4.10 மணிக்கு  சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு  10  மணிக்குள்  கும்பகோணத்தை  வந்தடைகிறது.  இதனால் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பல்வேறு  பணிகளுக்கு செல்பவர்களுக்கும் பணிகளை முடித்துக்கொண்டு திரும்பி வருபவர்களுக்கு பகல் நேரத்தில் இந்த ரயில் பயனுள்ளதாக  உள்ளது. இதனால் இந்த ரயில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து மெயின் லைன் வழியாக  தென் மாவட்டங்களுக்கு  செல்லும்  ஒரே ரயிலாகவும்  உள்ளது.   இந்த ரயிலில்  முன்பதிவு  செய்ய வேண்டும் என்றால் 2 மாதத்திற்கு முன்பே பதிவு செய்தாலும் காத்திருப்போர் பட்டியல் தான் கிடைக்கிறது என்று பயணிகளின் வேதனையான குரலாக உள்ளது.  முன்பதிவு கிடைக்கவில்லை என்று அவசர வேலையாக முன்பதிவு இல்லாப் பெட்டியில் பயணம் செய்தால் கூட்டம் தினந்தோறும் அலைமோதுகிறது.  இந்தப் பெட்டியில் பயணிகளிடையே சண்டை இல்லாத நாளே இல்லை என்கின்றனர்.

இப்படியுள்ள சூழ்நிலையில் கோடை காலத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட 4 மடங்கு கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் முன்பதிவு கிடைக்காமல்  முன்பதிவு இல்லா பெட்டியில்  கழிவறை, ரயில் பெட்டியின் வழிப் பாதை, வாசற்படி உள்ளிட்ட இடங்களில் இரவு நேரம் முழுவதும் நின்றுகொண்டே அவல நிலையில் பயணம் செய்கிறார்கள். சிலர் உடமைகள் வைக்கும் இடம் ரயில் பெட்டியின் கதவு மேல் அமர்ந்து பயணம் செய்வது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்துகிறது. 

People traveling dangerously on Tiruchendur-Chennai high speed train

இந்நிலையில் இந்த ரயில் மாலையில் சென்னையில்  புறப்பட்டு தாம்பரம்,  செங்கல்பட்டு, மருவத்தூர், திண்டிவனம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்கும் போது அங்குள்ள பயணிகள் ஏற முடியாமல் தவித்து திரும்பி செல்கிறார்கள். சிலர் அடித்து பிடித்து ஏறிக்கொண்டு படியில் தொங்கியவாறு வருகிறார்கள். கடந்த 22 ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் மாலை 5.10 மணிக்கு வந்தது. அப்போது முன்பதிவு இல்லாதப் பெட்டியில் ஏற்கெனவே அதிகக் கூட்டம்.  அதில் முண்டியடித்து ஏறிய கல்லூரி மாணவர் ஒருவர் பையைத் தோளில் மாட்டியவாறு ரயில் படியில் தொங்கியவாறு வந்தபோது திடீரென ரயில் நிலையம் நடைமேடையின் கடைசியில்  கீழே தொப்பென விழுந்தார்.  அவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது போன்ற சம்பவங்கள் தினந்தோறும் பல நடந்து வருகிறது.

எனவே செந்தூர் ரயிலில் முன், பின் என 2 முன்பதிவில்லா பெட்டிகள் உள்ளது. கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை ஒதுக்க வேண்டும். மேலும் திருச்செந்தூருக்கு சென்னையில் இருந்து பகல் நேரத்தில் கூடுதலாக ஒரு  ரயிலை இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவராம வீரப்பன் கூறுகையில், “ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம், நடராஜ கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் சிதம்பரத்திற்கு ரயில் முன்பதிவை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். இங்கு தான் அதிகமாக முன்பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் தேர்தலுக்கு முன் மைசூர் ரயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டு சிதம்பரத்தில் நின்று செல்லும் என அறிவித்ததை விரைவில் அமல்படுத்த வேண்டும். சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரே ரயில் மெயின் லைன் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் கட்டுக்கடங்கா கூட்டம் தினந்தோறும் செல்கிறது. இதனால் அவசர வேலையாக செல்வதற்கு முன்பதிவு இல்லா பெட்டியில் ஏற முடியாமல் பலபேர் ஏமாற்றம் அடைகிறார்கள். திருச்செந்தூர் ரயிலில் முன்பதிவில்லாதப் பெட்டியை அதிகப் படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து மெயின் லைனில் காலை 8 மணிக்கு திருச்சிக்கு செல்லும் சோழன் அதிவிரைவு ரயிலை விட்டால் மாலை 4.10 மணிக்கு தான் செந்தூர் ரயில் இதில் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள், தென்மாவட்ட மக்கள் என அதிகளவு கூட்டமாக உள்ளது. இதனால் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மாவட்ட பயணிகள் பயணம் செய்வதில் பெருத்த சிரமம் உள்ளது. எனவே இவர்கள் பயன்பெறும் வகையில் மாலையில் செந்தூர் ரயிலுக்கு முன் சென்னை முதல் திருச்சி வரை விரைவு ரயிலை மெயின் லைனில் இயக்க வேண்டும். இதனால் செந்தூர் ரயிலில் கூட்டம் குறையும். ரயில்வே நிர்வாகம் பயணிகளின் துயரத்தை கருதி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இனி கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது” - கிராம மக்கள் உறுதிமொழி

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Villagers pledge against illicit liquor in presence of Collector

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் நேற்று(21.06.2024) இரவு பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

Villagers pledge against illicit liquor in presence of Collector

அந்த ஆயவின் போது சிக்கிய 250 லிட்டர்  கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறினர். அதன்பின்னர், அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது; அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Next Story

கூடாரம் காலி; அடையாளத்தை இழக்கும் மாஞ்சோலை - அபலைகளுக்குக் கைகொடுக்கும் முதல்வர்!

Published on 22/06/2024 | Edited on 24/06/2024
plight of the people of Manjolai Estate

தலைமுறை வழியாய் 95 வருடங்கள் நெல்லை மாவட்டத்தின் அம்பை பகுதியின் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பி.பி.டி.சி. கம்பெனிக்கு இரவுபகல் பாராது விசுவாசமாய் உழைத்தவர்கள். அப்படிப்பட்ட மக்கள் அடுத்த வேளை உணவுக்கு, அவர்கள் தங்கள் பிள்ளைகளோடு என்ன செய்வார்கள் என்ற நன்றி உணர்வு இம்மியளவு கூட இல்லாமல் கடுமையாக நடந்து கொண்ட கார்ப்பரேட் கம்பெனி குத்தகை முடிவதற்கு இன்னும் நான்கு வருடங்கள் இருந்தபோதும் ஜூன் 17 முதல் கம்பெனி மூடப்படுகிறது.

plight of the people of Manjolai Estate

தொழிலாளர்களுக்கு வேலையில்லை. ஆரம்பத்தில் 25 சதவிகிதம் ஓய்வூதியத் தொகை. வீட்டைக் காலி செய்து சாவியை ஒப்படைத்தால்தான் மீதமுள்ள தொகை என்று ஐம்புலன்களையும் மூடிக்கொண்டு அறிவித்துவிட்டது. பிரபஞ்சத்தில் நடந்திராத கொடுமை.

எங்களின் திடீர் நிலைமைக்கேற்ப உதவுங்கள். நேரமே கொடுக்காமல் வெளியிட்ட அறிவிப்பால் சுருண்டு கிடக்கிறோம் என்று கார்ப்பரேட்டிடம் கெஞ்சியும் மன்றாடிய தொழிலாளர்களுக்கு பதிலில்லை. கண்ணீரே அவர்களின் வழிப்பாதையாக இருந்தது. கத்தி மீதிருக்கும் இந்த 3000 தொழிலாளர் குடும்பங்களின் நிலைமைகளை அரசு வரை கொண்டு சென்ற அரசியல் கட்சியினர் அம்மக்களின் நெருக்கடிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எங்களுக்கு மறுஜென்மம் அளியுங்கள் என்று தொழிலாளர்களும் அரசிடம் நிலைமையை தெளிவாக்கினர்.

plight of the people of Manjolai Estate

அதே சமயம் கார்ப்பரேட்டின் ‘வெளியேறு’ என்ற தகவலையறிந்த அரசும் உரிய நடவடிக்கையிலிறங்கியது. தாமதிக்காமல் இம்மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் அத்தனை குடும்பங்களுக்கும் உதவும் வகையில் இருப்பதற்கு வீடு, நிலம், வேலை, கல்வியைத் தொடர்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்கிற வகையில் அவர்களின் விருப்பத்தைத் தெரிவிக்க அத்தனை பேருக்கும் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மூலம் விண்ணப்ப படிவங்களை விநியோகித்து நிவாரணப் பணிகளை விரைவு படுத்தியிருக்கிறார். முதல்வரின் நடவடிக்கைகள் அம்மக்களின் நம்பிக்கையை வலுவாக்கியிருக்கிறது.

plight of the people of Manjolai Estate

ஆனாலும் தற்போதைய சூழலில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுகிற வகையில் தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதுவே எங்களின் குடும்பங்களை மேம்படுத்தும் என்று கோரிக்கை வைத்ததுடன், முதல்வர் தங்களுக்கான இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இன்னமும் அம்மக்களின் மனதில் நிலை கொண்டிருப்பதை அறியமுடிந்தது.

plight of the people of Manjolai Estate

வனத்துறையினர் மூலம் விநியோகிக்கப்பட்ட அந்த விண்ணப்பப் படிவத்தில், தேயிலை பறிப்பவரா, மேற்பார்வையாளரா அல்லது மற்ற வேலைபார்ப்பவரா, அவர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள், எந்தப் பஞ்சாயத்தில் வசிப்பவர், குடும்ப அட்டை எண், எந்த வருடத்தில் தேயிலை தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தார், குழந்தைகளின் எண்ணிக்கை கல்வியின் நிலை, விருப்ப ஓய்வூதிய திட்டத்தில் கையெழுத்திட்டவரா, அரசிடமிருந்து எந்த விதமான உதவியை எதிர்பார்க்கிறார், நிலமாக உதவியா, அரசு ஒதுக்கீடு செய்யும் வீடா? இங்கிருந்து வெளியே சென்ற பிறகு எந்த ஊரில் அல்லது கிராமத்தில் குடியேற விரும்புகிறார்கள் உட்பட அனைத்து விபரங்களும் பூர்த்தி செய்து விரைவாகக் கேட்கப்பட்டுள்ளது. அம்மக்களின் மறு வாழ்வே முக்கியம் என்றும் அதிகாரிகளின் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

நாம் மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெட்டி எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்ததில் அங்கு நடப்பவைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மன நிலைபற்றியும் நுணுக்கமாகவே கேட்டறிந்ததில், தொழிலாள மக்களின் மனதில் இனம் புரியாத அச்சமும் பதட்டமுமிருப்பதைக் காண முடிந்தது. கம்பெனியின் திட்டவட்ட அறிவிப்பின்படி பல தொழிலாளர்கள் தங்களின் இருப்பிடங்களைக் காலி செய்து கொண்டிருந்தபோது கூட அவர்களே அறியாமல் கண்ணீர் பொத்துக் கொண்டு கிளம்பியது நெருடலாக இருந்தது.

plight of the people of Manjolai Estate
துரைப்பாண்டியன்

“எதிர்ப்பாக்காத அறிவிப்ப சொல்லிருச்சி கம்பெனி. பித்துப் புடிச்சுப் போயி நிக்கோம்யா. இத்தன வருஷமா இதே வேலையச் செஞ்சு பழக்கப்பட்ட நாங்க வேற தொழில செய்ய முடியுமா? மனசும் ஒடம்பும் ஒத்துழைக்குமா தெரியல. ஆனைமுடி, வால்பாறை எஸ்டேட்டுக்கு வாங்கன்றாக. அங்க அத்தன சுலபமா குடி பெயரமுடியாதுய்யா. அதனால தாம் இத அரசு ஏத்து நடத்துனா எங்களுக்கு உசுரு கெடச்சமாதிரின்றோம்யா...” என்றார் தளர்ந்த குரலில் குதிரைவெட்டி எஸ்டேட் தொழிலாளியான துரைப்பாண்டியன்.

plight of the people of Manjolai Estate
சமுத்திரக்கனி

மாஞ்சோலையின் சமுத்திரக்கனியோ பதறுகிறார். “நா பொறந்தது வளர்ந்தது வால்பாறை எஸ்டேட்ல தான். அங்க கல்யாணம் முடிஞ்சி 23 வயசுல இங்க வந்தேம்யா. 24 வருஷமா இங்க வேல பாத்து வாரேன். எங்க குடும்பத்து பூர்வீகம் கடையநல்லூர். வால்பாறையிலயும் இங்கயும் ஒரே மேனேஜ்மெண்ட் தான். காலி பண்ணுங்கன்னு கம்பெனி திடீர்னு சொன்னதுனால இனிமே என்ன பண்றதுன்னு தவிப்பில இருக்கோம். கம்பெனி கூட எங்க கிராஜூட்டி கணக்க சரியா சொல்லல. இனிமே எங்க புள்ளைங்க வாழ்வாதாரம் என்னாகுமோன்னு தெரியல. ஏற்கனவே நடக்குற தேயில தொழில்தான. அரசாங்கம் என்னயப் போல தொழிலாளிகளுக்கு எது அவசியம்னு நல்ல முடிவு எடுக்கும்ற நம்பிக்கை மட்டும் எங்கள விட்டுப் போகல..” என்றார் திடமாக.

ஏற்றுக் கொள்ள சிரமப்படுகிற புதிய சூழலை உருவாக்குவதை விட பழகிப் போன வாழ்வாதாரத்தை சீர் படுத்துவதே மேல், என்பதே மாஞ்சோலையின் மனவோட்டமாக இருக்கிறது.