Skip to main content

பட்டா பெயர் மாற்ற நூதன முறையில் லஞ்சம்; தப்பி ஓடிய விஏஓ!

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

patta name transfer incident at kallakurichi karadi chittur vao involved 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடி சித்தூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருக்குச் சொந்தமான நிலம் அவரது முன்னோர்கள் பெயரில் கூட்டுப்பட்டாவாக இருந்து வந்துள்ளது. அதை தனது பெயருக்கு தனிப்பட்டவாக மாற்றம் செய்து தரக்கூறி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் விண்ணப்பம் செய்தார். அவரது மனு சம்பந்தப்பட்ட கரடி சித்தூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யா பட்டா மாற்றம் செய்து தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

 

இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் வெங்கடேசன் நேரில் சென்று பட்டா மாற்றம் செய்வதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யா, வெங்கடேஷனிடம் பட்டா மாற்றம் செய்து தர பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்து தர முடியும் என்று பேரம் பேசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் பட்டா மாற்றம் செய்ய ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய வெங்கடேசன் உடனடியாக கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கடந்த 24ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசாரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவிடம் கொடுக்குமாறு ஆலோசனை கூறியுள்ளனர்.

 

அதன்படி வெங்கடேசன் லஞ்சப் பணத்துடன் கரடி சித்தூர் சென்றுள்ளார் அங்கு கிராம நிர்வாக அலுவலர் இல்லை அவரை வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் வெங்கடேசனை கச்சராபாளையம் வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற வெங்கடேசன் கிராம நிர்வாக அலுவலர் கூறிய இடத்தில் அவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த  கரடி சித்தூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் கிராம நிர்வாக அலுவலர் சற்று தூரத்தில் நிற்பதை சுட்டி காட்டி அவர் லஞ்ச பணத்தை வாங்கி வருமாறு என்னிடம் கூறியுள்ளார் என்று பணத்தைக் கேட்க அதன்படி வெங்கடேசன் பொன்னுசாமி இடம் கிராம நிர்வாக அலுவலருக்கு சேர வேண்டிய பத்தாயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் பொன்னுசாமியை கையும் களவுமாக பிடித்தனர்.

 

போலீசார் பொன்னுசாமியை மடக்கிப் பிடித்த காட்சியை சற்று தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட பொன்னுசாமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவுக்கு இடைத்தரகராக இருந்து பொதுமக்களிடம் லஞ்சப் பணம் வசூல் செய்து கொடுக்கும் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதை பொன்னுசாமி கிராம நிர்வாக அலுவலர் கூறி அவருக்காக பணத்தை பெற்றதாக கூறி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது தலைமறைவாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்ற சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.