Skip to main content

"இங்க வந்து சத்தமெல்லாம் போட்டுட்டு இருக்கக் கூடாது..." - முன்னாள் அமைச்சர் மீது கோபப்பட்ட பசும்பொன் மக்கள் 

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

pasumpon village people angry ex minister rp udhayakumar

 

“தேவர் ஐயா எதிர்ல சத்தம்லாம் போட்டுட்டு இருக்கக் கூடாது, ஒழுங்கா ஓடிப் போய்டு..” ஆர்.பி. உதயகுமாரை ஒருமையில் பேசும் வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலைப் போராட்ட தியாகியும் பார்வர்டு ப்ளாக் (FORWARD BLOCK) கட்சியின் தலைவருமான முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் பகுதியில் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அந்த நாளில் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள்.

 

இதனையடுத்து, முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா பசும்பொன் பகுதியில் நடைபெறுகிறது. இந்த விழாவானது, அக்டோபர் 28ம் தேதியில் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேவர் ஜெயந்தியை ஒட்டி பசும்பொன் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தேவர் நினைவிடத்திற்கு செல்லமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் தற்போது தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி செல்லாதது கட்சிக்கு நல்லதல்ல என சொந்தக் கட்சியினரே கூறி வருகின்றனர்.

 

இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அங்கிருந்த சில அதிமுக தொண்டர்கள்  “அண்ணன் ஆர்.பி உதயகுமார் வாழ்க, வருங்கால முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வாழ்க” என தேவர் நினைவிடத்திற்கு உள்ளேயே கோஷம் போடத் தொடங்கியுள்ளனர்.

 

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பசும்பொன் கிராம மக்கள் அங்கு வந்த ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சிலர் ஆர்.பி. உதயகுமாரை கடுமையாகச் சாடியுள்ளனர்.  அப்போது, அதில் ஒருவர் பேசும்போது “யார்ரா அது எடப்பாடி வாழ்கனு கோஷம் போட்டது...நீங்கள் அமைச்சரா இருங்க, யாரா வேணாலும் இருங்க...இங்க வந்து சத்தம் எல்லாம் போட்டுட்டு இருக்கக் கூடாது. வந்தோமா...சாமி கும்பிட்டோமா...போனோமான்னு இருக்கனும்...ஒழுங்கா ஓடிப் போய்டுங்க...(அங்கு முன்னாள் அமைச்சரை ஒருமையில் பேசினார்கள். அதை நாம் மரியாதை நிமித்தத்திற்காக மாற்றியுள்ளோம்) என ஆர்.பி. உதயகுமாரை திட்டித் தீர்த்துள்ளார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுக நிர்வாகிகள், அவர்களை சமாதானப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவில் ஆர். பி. உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.