passed away of the teacher who disturbed all the students

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மதி. பிரபாகரன் (வயது 40). ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளிகளில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாகி போட்டித்தேர்வை எதிர்கொண்டு சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தார்.

பள்ளியில் ஆசிரியராகப் பணி ஏற்ற பிறகு தனது பாடத்தில் கவனம் செலுத்துவதுடன், தனது வகுப்பு மாணவர்கள் மட்டுமின்றி பள்ளியில் உள்ள அத்தனை மாணவர்களிடமும் பாசமாக இருந்துள்ளார். பள்ளி நிர்வாகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்குத்தயாராகும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து பள்ளி மட்டுமின்றி பள்ளிக்கு வெளியே பெற்றோர்களிடமும் நற்பெயரையும் சம்பாதித்து வைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சில நாட்களாக சோல்டர் வலி ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்று வந்தவருக்கு வியாழக்கிழமை இரவு திடீரென வயிற்றுவலியும் ஏற்பட கீரமங்கலத்தில் ஒரு தனியார் கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை பெற்று அறந்தாங்கி தனியார் மருத்துவமனைக்கு சென்றவருக்கு நாடித் துடிப்புகள் குறையத் தொடங்கி இருந்தது. அறந்தாங்கியில் அவசரச் சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் திருச்சி கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Advertisment

passed away of the teacher who disturbed all the students

அதிகாலையில் ஒரு இளம் ஆசிரியரின் மரணச் செய்தி கேட்டு ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கலங்கிப் போனார்கள். உயிரிழந்த ஆசிரியரின் உடல் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரும் முன்பே கலங்கிய கண்ணீரோடும், கைகளில் மாலையோடும் காத்திருந்தனர் மாணவர்கள். “எல்லாருகிட்டயும் அன்பை கொட்டி பேசுவீங்ளே சார், எல்லாரும் நல்லா படிச்சு என்னைப் போல போட்டித் தேர்வுல பாசாகி வேலைக்கு வரணும். அதுக்கு போட்டித் தேர்வுகளை எப்படி எதிர்கொள்ளணும் என்று சொல்லிக் கொடுத்தீங்க... இனி யாரு சார் சொல்லிக் கொடுப்பாங்க...” என்று கதறி அழுத மாணவர்களைத்தேற்றினர். பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு உதவிகள் செய்ததோட வெளியிலயும் நட்பா பழகுவார் எங்க சார் என்றனர்.

இதே போல சக ஆசிரியர்களும், உறவினர்களும், நண்பர்களும் பிரபாகரன் இழப்பை ஏற்க முடியல என்றனர். சமீப காலமாக நல்ல மருத்துவர்களை, நல்ல மாணவர்களை, நல்ல விளையாட்டு மாணவர்களை இழந்து வந்த நாம் நல்ல ஆசிரியரையும் இழந்துவிட்டோம் என்று கதறினர் சில இளைஞர்கள்.