Skip to main content

சாதிச்சுட்டேன்யா.. சாதிச்சுட்டேன்... - தீர்ந்தது ஏக்கம், மகிழ்ச்சியில் பாரிவேந்தர் 

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மத்தியில் பாஜக தனிப்பெரும்பாண்மை பெறும் அளவுக்கு முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக முன்னணியில் இருக்கிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐ.ஜே.கே எனப்படும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் (எ) பச்சைமுத்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வரும் இவர், தனக்கு அடுத்த இடத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவபதியை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல உள்ளார்.

 

parivendhar ijk



புகழ் பெற்ற எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் தலைவரான பாரிவேந்தர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது சமூகம் சார்ந்த சங்கத்தை இந்திய ஜனநாயக கட்சி என்று உருவாக்கினார். அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற இயலவில்லை. திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் சொல்லத்தக்க வகையில் வாக்கு வாங்கியது இ.ஜ.க. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பாஜகவுடன் நன்கு நெருக்கம் காட்டிய பாரிவேந்தர், தமிழகத்தில் பாஜக ஒரு பெரிய மாநாட்டை வண்டலூரில் நடத்த பின்புலனாக இருந்தார். அந்தத் தேர்தலில் பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் பாஜக சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு லட்சத்துக்கும் மேலான வாக்குகளை வாங்கினாலும் வெற்றி பெற முடியவில்லை. தேர்தலுக்குப் பிறகும் பாஜகவுடன் நட்பாகவே இருந்த பாரிவேந்தர், 2019 தேர்தலில் மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால், பாஜகவோ அதிமுகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து பாரிவேந்தரை மறந்தது. அவருக்கு சீட் அறிவிக்கப்படவில்லை.

பிறகு, திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலை சந்தித்துப் பேசினார். புதிய கூட்டணி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திமுகவிடமிருந்து அழைப்பு வர, ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆனார் பாரிவேந்தர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவானது. இப்படி ஒரு கூட்டணி அமைந்ததிலிருந்தே வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையும் அதனால் உற்சாகமும் பெற்றிருந்தார் பாரிவேந்தர். தற்போது அவரது வெற்றி உறுதியாகிக்கொண்டு இருக்கிறது. அதுவும் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் பாரிவேந்தர்.

  stalin parivendhar



தன்னைப் போலவே கல்வித்தந்தைகளாக இருக்கும் ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம், விஸ்வநாதன் ஆகியோர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாகி டெல்லி சென்று வந்துவிட்டனர். ஆனால், தனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லையே என்ற கவலை அவருக்கு இருந்தது. இதற்காக எவ்வளவு தாராளமாக இருந்தபோதும் வெற்றி வாய்ப்பு தள்ளிப் போனது. அது இப்போது நிகழ்ந்திருப்பதால் அவரது ஏக்கம் தீர்ந்து தனது கட்சிக்காரர்களிடம் உற்சாகமாகப் பேசி வருகிறாராம். இதிலென்ன விசேஷமென்றால் பாஜக கூட்டணியில் பாரிவேந்தர் எதிர்பார்த்தது போல் சீட் கிடைத்திருந்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம்தான். ஆனால், கடைசி நேரத்தில் திமுகவுடன் இணைந்ததால் சீட்டும் கிடைத்து வெற்றியும் கனியும் நிலை இருக்கிறது.          

 

         

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.