Skip to main content

அரசு பள்ளிகளை நோக்கி திரும்பும் பெற்றோர்கள், ஆசிரியர்கள்..! 

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Parents and teachers returning to government schools ..!

 

கரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. அதேவேளையில், கரோனா காரணமாக நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்களும் தங்கள் வருமானத்தை இழந்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது 2021-2022க்கான கல்வியாண்டு துவங்கி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. 

 

கரோனா முதல் அலையின்போது பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்ட போது, தனியார் பள்ளிகள் 75% கட்டணத்தை வாங்கிக்கொள்ள அரசு அனுமதி அளித்தது. மேலும், அந்த 75% கட்டணத்தை மூன்று தவணைகளாக வாங்கிக்கொள்ளவும் அனுமதி அளித்திருந்தது. அதே நடைமுறையையே தற்போதைய கல்வியாண்டிற்கும் பின்பற்றப்பட்டுவருகிறது. கரோனாவால் வாழ்வாதாரம் மற்றும் வருமானம் இழந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்த்துவருகின்றனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணி செய்து வருபவர் அன்பு. அவரது கணவர் அன்புச் சோழன். இவர், அதே மாவட்டம் திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்கள் மகள் ஸ்ரீ விவேகாவை, அவரது தாயார் அன்பு பணி செய்யும் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிப்பதற்காக சேர்த்துள்ளனர். 

 

இந்த ஆசிரிய தம்பதி போலவே அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் மிகுந்த ஆர்வத்துடன் சேர்த்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக திகழும் இந்த ஆசிரியர் தம்பதியின் செயல் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நல்ல கல்வியை அரசு பள்ளிகளில் தர முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர்களிடம் மட்டுமல்ல அதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது கண்டு பல்வேறு தரப்பினரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.