Skip to main content

பயன்பாடு இல்லாத ஓ.என்.ஜி.சி கிணற்றை மூட வல்லுநர்கள் குழு ஆய்வு!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

 Panel of experts to close unused ONGC well

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நல்லாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, வானக்கண்காடு, கோட்டைக்காடு, புதுப்பட்டி உள்பட 8 இடங்களில் எண்ணெய் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் சுமார் 10 ஆயிரம் அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து சோதனை செய்தனர். ஆனால் வருமானத்தை விட செலவு அதிகமாகும் என்பதால் இந்த ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால் நில உரிமையாளர்களுக்கு குத்தகை வழங்கி வந்தனர்.

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்ட நிலையில் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் வெடித்த போராட்டம் தொடர்ந்து 196 நாட்கள் நடந்தது. அப்போது தமிழகத்தில் விளை நிலங்களை அழித்து ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க கூடாது, ஏற்கனவே எண்ணெய் எடுக்க அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளைப் பாதுகாப்பாக மூடி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. அப்போதைய ஆட்சியாளர்களும் மாவட்ட நிர்வாகமும் கோரிக்கையை ஏற்பதாக உறுதியளித்த பிறகு பல கிராமங்களில் நடந்த போராட்டம் நிறுத்தப்பட்டது.

 

பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்பாக மூட ஓ.என்.ஜி.சி நிறுவனம் முன்வந்து சில மாதங்களாக வல்லுநர்கள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். புதுப்பட்டியில் மூடப்படும் ஆழ்குழாய் கிணறு மற்றும் கட்டுமானங்களிலிருந்து சேகரிக்கப்படும் மண், ஜல்லியை மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்க ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் கடிதம் கொடுத்திருந்தனர்.

 

இந்தநிலையில் வானக்கண்காடு கிராமத்தில் உள்ள தரைமட்ட எண்ணெய் ஆழ்குழாய் கிணற்றை மூட 2 வது முறையாக வல்லுநர் குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். இந்த குழுவில் ஓ.என்.ஜி.சி  புவியியல் ஆய்வு பொறியாளர் அருண்குமார், கட்டுமானப் பொறியாளர் எழில்வாணன், கனரக வாகன தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி மதிவாணன், பாதுகாப்பு அதிகாரி லோகநாதன், நிலமெடுப்பு வட்டாட்சியர் சந்திரசேகரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களின் அறிக்கையைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அனுமதிபெற்று வானக்கண்காடு எண்ணெய் ஆழ்குழாய் கிணறு மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.