Skip to main content

இன்று அப்துல் கலாமை தெரிந்து கொள்ளுங்கள்...

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
A. P. J. Abdul Kalam -  India's former President - Chennimalai - Erode

 

தமிழகத்தின் கடைக்கோடியான ராமேஸ்வரத்தில் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகனாக, ஜனாதிபதியாக உழைப்பால் உயர்ந்தவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். அந்த மகத்தான மனிதன் இறந்து ஐந்தாண்டாகிறது. இன்று 5 ஆம் ஆண்டு நினைவு நாள். அப்துல் கலாம் அவர்களுக்கு மறவாமல் நினைவு அஞ்சலி செலுத்தும் உள்ளங்களும் இருக்கிறார்கள்.

 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ளது ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி. இதன் தாளாளரும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான மக்கள் ராஜன் தனது வளாகத்தில் ஏற்கனவே கலாம் அவர்களின் சிலையை அமைத்திருந்தார். அந்த திருவுருவச் சிலைக்கு இன்று மக்கள்ராஜன் தலைமையில் பலரும்  மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள். 

 

இந்த நிகழ்வில் சுதந்திரப் போராட்ட தியாகி மறைந்த  திருப்பூர் குமரன் அவர்களின் வாரிசான அண்ணாதுரை என்பவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கலாம் சிலைக்கு மாலை அணிவித்து கலாமின் உயர்ந்த நோக்கங்களை வாசித்து  புகழ் அஞ்சலி செலுத்தினார்.

 

மறைந்த மேதகு அப்துல் கலாமால் உயர்ந்த பல அரசியல் தலைவர்கள் அவரை மறந்தநிலையில் ஒரு குக்கிராமத்தில் இன்று அப்துல் கலாமை தெரிந்து கொள்ளுங்கள் என அவர் புகழ் பாடுவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"விவசாயிகளை இளைஞர்கள் அங்கீகரிப்பது அவசியம்" - விஷால்

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

vishal about farmers

 

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் மறைந்த தினம் இன்று (27.7.2023). இந்தியாவின் முதல் குடிமகனாக, ஜனாதிபதியாக உழைப்பால் உயர்ந்த அவரை இன்று அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் கமல், "வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர்" எனக் குறிப்பிட்டு ஒரு பதிவை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். 

 

இந்நிலையில் விஷால், "ஏபிஜே அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டேன். விஜய் வர்மா என்ற இளைஞன், விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலங்குகள் வயல்களுக்குள் நுழைவதைத் தவிர்க்கவும் அங்குள்ள பயிர்களை உண்ணாமல் இருக்கவும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளான். அதனை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன். 

 

வளர்ந்து வரும் திறமையாளர்கள் எம்.என்.சி (MNC) களுக்காக அல்லாமல் விவசாயிகளுக்காக ஏதாவது செய்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய முயற்சியையும் யோசனையையும் பாராட்டுங்கள். விவசாயிகளை இளைஞர்கள் அங்கீகரிப்பது நமது சமூகத்திற்கு மிகவும் அவசியம். தலை வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Next Story

"வாழ்வியல் நெறிகளில் சிறந்து விளங்கிய மாமனிதர்" - நினைவுகூறும் கமல்

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

kamal tweet about abdul kalam

 

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் மறைந்த தினம் இன்று (27.7.2023). இந்தியாவின் முதல் குடிமகனாக, ஜனாதிபதியாக உழைப்பால் உயர்ந்த அவரை இன்று அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

 

அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர், ஒரு பொன்னுலகைக் கனவு கண்டு அதை மாணவ சமுதாயத்திடம் விதைத்துப் போனவர். சூழியலும் நாட்டின் சூழ்நிலைகளும் மேம்படத் தன் சிந்தனை மொத்தமும் செலவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.