Skip to main content

நன்றி சொல்ல வந்த கார்த்தி சிதம்பரம்; ஒதுங்கி நின்ற ப.சிதம்பரம்!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
P. Chidambaram stood aside when Karthi Chidambaram thanked people

சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பே வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியாகச் சென்று அந்தந்தந்தப் பகுதி திமுக கூட்டணிக் கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.

அதே போல, வெள்ளிக் கிழமை(14.6.2024) ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனுடன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பேசிய அவர், “தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய நல்லாட்சிதான் காரணம். அதே போல என்னைத் தொடர்ந்து வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமை, வெற்றி பெறச் செய்த வாக்காளர்கள், களப்பணியாற்றிய அமைச்சர் மெய்யநாதன், கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் உங்களுக்கு தேவையான என்ன காரியமாக இருந்தாலும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ப.சிதம்பரம் வரவில்லையா...? என்று கேட்க, அதோ.. அங்கே நிற்கிறார் என்று கார்த்தி சிதம்பரம் கையைக் காட்டிய திசையில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். மகன் கார்த்தி சிதம்பரம் பிரச்சார வாகனமேறி நன்றி கூறிக் கொண்டிருக்கும் போது ப.சிதம்பரம் மக்களோடு மக்களாக சாலையில் நின்று பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார். சில இடங்களில் காரில் இருந்தே இறங்கவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன் மகனுக்காக மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். ஆனால் இன்று நன்றி சொல்ல வந்துவிட்டு நன்றி அறிவிப்பு பிரச்சார வாகனத்தில் ஏறாமல் ஒதுங்கி நிற்பது ஏன் என்ற கேள்ளி தொகுதி மக்களிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு” - ப. சிதம்பரம்!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
ADMK not contesting by elections is an order from the top p Chidambaram 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. 

ADMK not contesting by elections is an order from the top p Chidambaram 

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளரின் (பாமக) தேர்தல் வெற்றி வாய்ப்பை எளிதாக்கும் வகையில் மேலதிகாரிகளிடம் இருந்து உத்தரவு பெற்றுள்ளது என்பதற்குத் தெளிவான சான்று இது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் பினாமி (பாமக) மூலம் போரிடுகின்றன. இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் மகத்தான வெற்றியை அதிமுக உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“தேர்தல் கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது” - ப.சிதம்பரம்!

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
Election polls have fooled people  P. Chidambaram

உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிந்த பிறகு இந்தியாவில் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. அதில், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 150க்கும் குறைவான தொகுதிகளையும் என்று கூறியிருந்தது.

இதனையடுத்து, கடந்த 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றது. 

Election polls have fooled people  P. Chidambaram

இந்நிலையில் இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை, சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை இலக்கு வைத்த பாஜக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்தியா கூட்டணி தோல்வி அடையவில்லை வெற்றி அடைந்துள்ளது. தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் கொண்டாடுகிறோம். அதில் மோடிக்கு என்ன பொறாமை?. தார்மீக தோல்வி பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் தான். வேண்டுமானால் அவர்களும் கொண்டாடட்டுமே யார் வேண்டாம் என்றது?.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொறுத்தவரை மேம்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.

3 வது முறையாகப் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் பிரதமர் மோடி ஒப்பிட்டுக் கொள்கிறார். அதனை நாங்கள் நிராகரிக்கிறோம். அதனை இந்த நாட்டு மக்களும் நிராகரிப்பார்கள். பாஜகவின் ஒரு மனித ஆட்சியின் நிலை தற்பொழுது கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 

Election polls have fooled people  P. Chidambaram

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறானது. கருத்து கணிப்பு அனைத்தையும் ஒரே இடத்தில் தயாரித்து ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாஜக 350 தொகுதிகளைப் பெறும் என ஒரே மாதிரி சொன்னது எப்படி?.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது” எனத் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.