முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டிலுள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை கடந்த 2015- ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் ரூ.4.25 கோடி என்ற விலைக்கு விற்பனை செய்தனர். சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
![p chidambaram family enforcement directorate investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/LOkydt141qOgL7RuM5NPKkdwc2K4EQNn3sch8_vVmZ8/1573643585/sites/default/files/inline-images/karthik333.jpg)
இந்தத் தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடி மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் ரூ.1.35 கோடி ஆகியவை வருமான வரிக் கணக்கில் காட்டப்படவில்லை என்று அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே அமலாக்கத்துறை அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் நிறுவனத்தில் சோதனை நடத்தி கார்த்தி சிதம்பரம் விற்பனை செய்த நில விவகாரம் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரியான ரோகன்ராஜ் வருமான வரித்துறை சார்பில் சாட்சியம் அளித்தார். ஆனால், நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் கோர்ட்டில் பதிவு செய்யப்படவில்லை.
![p chidambaram family enforcement directorate investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/X7kNvVnU0jLx5Ge__8g4wzd84BW2qa7iXASG6wJ8mUU/1573643598/sites/default/files/inline-images/pa%20chidambaram.jpg)
எனவே, அதிகாரி ரோகன்ராஜிடம் மீண்டும் விசாரணை நடத்தி நில விவகாரம் தொடர்பான ஆவணங்களைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் சென்னை சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவை அனுமதித்து உத்தரவிட்டார்.