Skip to main content

தீபாவளி போனஸில் திக்குமுக்காடிய ஊழியர்கள்!

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

The owner made the employees happy with a Diwali Gift

 

தீபாவளி பண்டிகையின் போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகை போனசாக வழங்குவது வழக்கம். இதில் சில தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பொருட்களாகவும் தங்களது தீபாவளி போனஸை வழங்குவது வாடிக்கை. அந்த வகையில், கோத்தகிரியில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட் உரிமையாளர், தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த மோட்டார் சைக்கிளை தீபாவளி பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். 

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், அந்தப் பகுதியில் தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி எனப் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். இவரது நிறுவனங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சிவக்குமார், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் ஆயுதபூஜை பண்டிகையின் போது தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 

 

இந்த நிலையில், இந்த வருடம் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையின் போது விலை உயர்ந்த பரிசைக் கொடுத்து விட வேண்டும் என்று எண்ணிய சிவக்குமார், தனது நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் 15 ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். பின்பு, அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்ட போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களைக் குறிப்பிட்டனர். அதனைக் கேட்டுக்கொண்ட சிவக்குமார் அவர்கள் விரும்பும் வாகனங்களை முன்பதிவு செய்து தனது நிறுவனத்திற்கு வரவழைத்துள்ளார். 

 

அதன் பின்னர் அவர், அந்த 15 ஊழியர்களையும் வரவழைத்து, தீபாவளி பரிசாக மோட்டார் சைக்கிள்களின் சாவிகளை அவர்களிடம் கொடுத்து இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். அத்துடன், அந்த 15 ஊழியர்களுடன் தானும் ஒரு வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார். இது தவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களையும், போனஸ் தொகையும் வழங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது.