parliament

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அட்வைஸ் செய்தபடி நாடாளுமன்றத்தில் கடும் அமளி செய்துள்ளனர் அதிமுக உறுப்பினர்கள்.

மத்திய நீர்வளக் குழுமம், கர்நாடகத்திலுள்ள மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக சபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இன்று காலை அவை கூடியதும் நோட்டீஸ் கொடுத்தனர்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வெவ்வேறு பிரச்சனைகளை முன்வைத்து சபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தது.

இதனை நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்கவில்லை. உடனடியாக இதனை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போதே, நமக்கு டெல்லி சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த எடப்பாடி, எம்பிக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி கடந்த வாரம் அதிமுக எம்பிக்கள் கூட்டம் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.

Advertisment

''இனியும் நாம் பாஜகவை நம்பி அரசியல் பண்ண முடியாது. அவர்கள் நமக்கு எதிராக இருக்கிறார்கள். அதனால் தமிழக நலன்களுக்கு எதிராக பாஜக எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு காட்டியாக வேண்டும். ஆகையால் 12ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக அரசை எதிர்த்து போர்க்குணத்துடன் ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் அதிமுக எம்பிக்களின் நடவடிக்கையில் இருக்க வேண்டும்'' என்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அட்வைஸ் செய்திருந்தனர். இந்த அடிப்படையில்தான் இன்று அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.