Online Rummy- Report Submission to the Chief Minister!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

Advertisment

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், அதன் காரணமாக கடன் தொல்லை மற்றும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். இதனால் பல்வேறு சமூகப் பொருளாதார குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டு வந்தன.

Advertisment

இதையடுத்து, கடந்த ஜூன் 10- ஆம் தேதி அன்று ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதுப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட தமிழக முதலமைச்சர் ஆணையிட்டார்.

இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன் ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே இ.கா.ப. ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இக்குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் அளித்தது. இந்த அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, இன்று (27/06/2022) மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.