![Onions dumped by the roadside; Packed masses of people](http://image.nakkheeran.in/cdn/farfuture/JJRKlo3mMq_qbGfYPUzcNkUFldzr-8YxJYO1-JK3o1Q/1684766848/sites/default/files/inline-images/Q6_0.jpeg)
சென்னை குன்றத்தூர் அருகே சாலை ஓரத்தில் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டுக் கிடந்த வெங்காயத்தை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.
சென்னை குன்றத்தூரை ஒட்டியுள்ள வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் மூட்டை மூட்டையாக வெங்காயம் கொட்டப்பட்டுக் கிடந்தது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு வெங்காய மூட்டைகளை அள்ளிச் சென்றனர். வெங்காய மூட்டைகள் சாலையில் கேட்பாரற்று கிடக்கும் தகவல் அறிந்து அங்கு வந்திருந்த சிலர் ஒரே வண்டியில் மூன்று, நான்கு மூட்டைகளைத் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வெங்காய மூட்டைகளை சாலையின் ஓரத்தில் வீசிச் சென்றது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தபோது வெளிநாடுகளில் இருந்து அவை இறக்குமதி செய்யப்பட்டதோடு, சிலர் கேளிக்கையாக பெரிய வெங்காயத்தை திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பரிசாக அளித்து வைரலாக்கி இருந்தனர். இந்த நிலையில் வெங்காய மூட்டைகள் கொட்டப்பட்டு பொதுமக்களால் அள்ளிச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.